வியாழன், 15 ஏப்ரல், 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்படுவர் - ஜோ பைடன் அறிவிப்பு

dailythanthi.com :வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க படையினர் 2,500 பேரும், நோட்டோ படையினர் சுமார் 7,000 பேரும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.ஆனாலும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலீபான்கள்-ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற டிரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே 1-ம் தேதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தலீபான்களுடனான ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் திரும்ப்பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்த கோர சம்பவத்தின் 20-வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

அந்த நாளுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரும் திரும்பப்பெறப்பட உள்ளனர். 

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். 

அப்போது ஜோ பைடன் பேசியதாவது, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப்பெறுவதற்கான நடைமுறைகளை அமெரிக்கா மே 1-ம் தேதி முதல் தொடங்கும். இந்த வெளியேற்றம் அவசர அவசரமாக நடைபெறாது. பலத்தை குறைக்கும்போது தலீபான்கள் தாக்குதல் நடத்தினால் எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எங்களையும், எங்கள் கூட்டளிகளையும் பாதுகாப்போம் என்று தலீபான்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

செப்டம்பர் 11 தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்படும். ஆனால், பயங்கரவாத அச்சுறுத்தல்களில் நாங்கள் கவனமாக இருப்போம்.

அப்பகுதியில் உள்ள பிற நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். நிலையான ஆப்கானிஸ்தானுக்கு இந்த நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 2,500 வீரர்களையும் அமெரிக்கா திரும்பப்பெறுவது சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருத்தப்படுகிறது.
Related Tags :

கருத்துகள் இல்லை: