வியாழன், 30 ஜனவரி, 2020

மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பத்திர மோசடி.. சவுக்கு சங்கர்

savukkuonline.com : இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அரசியல் கட்சிக்களுக்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாயை, நன்கொடையாக கொடுத்தபோது, அந்த பரிவர்த்தனைகளுக்கான கமிஷன், வங்கி கட்டணம், அச்சடிக்கும் செலவு, எழுதுபொருள் செலவு ஆகிய செலவுகள் அனைத்தையும், இந்தியாவின் வரிசெலுத்தும் குடிமகன்கள் ஏற்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலை, ஹப்பிங்டன் போஸ்ட் பரிசீலித்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
நன்கொடை அளிக்கும் செல்வந்தர்களோ, நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளோ, இந்தத் தேர்தல் பத்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், அவற்றை அச்சடிக்கவும் ஆகும் செலவுகளை ஏற்பதில்லை.   மாறாக, இதற்கான செலவு, இந்திய கூட்டு நிதியில் (Consolidated fund of India) இருந்து செலவிடப்படுகிறது. இந்த இந்திய கூட்டு நிதிக்கான வருவாய்  இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  அதே நேரத்தில், நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு வங்கி செய்யும் சேவைக்கான கட்டணங்கள், நம்மிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றது.

2018-19 ஆண்டில் மட்டும், பிஜேபி 1450 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது என்பது ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. பிஜேபி கட்சிதான் தேர்தல் பத்திரத் திட்டத்தில் அதிகப்படியான பயன் அடைந்துள்ளது.  இந்தக் கட்சிக்காக, இந்தியாவின் வரிசெலுத்துவோர் தங்கள் பணத்தை செலவிட்டிருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.
மேலும் இதில் வேதனையான மற்றொரு விஷயம் என்னவென்றால், நன்கொடை அளிக்கும் நிறுவனங்களும், செல்வந்தர்களும், இத்தகைய நன்கொடைக்காக முழுமையான வரிவிலக்கு பெறுகிறார்கள் என்பதுதான்.  தேர்தல் பத்திர திட்டம் தொடர்பான நிதி அமைச்சகத்தின், கடிதப் போக்குவரத்துகள், அலுவலகக் குறிப்புகள்,  நடப்பு குறிப்புகள் ஆகிய அனைத்தையும் பரிசீலனை செய்ததில் தேர்தல் பத்திரத் திட்டத்துக்கான செலவுகள் அனைத்தையும், பொது மக்களின் நிதியிலிருந்தே செலவிட வேண்டும் என்பது திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலே முடிவு செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது.  தொடக்கத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, ஆகும் செலவினங்கள் எப்படி செய்யப்படப் போகின்றன என்ற விபரங்களை அரசு பொது வெளியில் வைக்கவே விரும்பியது.  ஆனால், பின்னாளில், இந்த விபரங்கள் ஸ்டேட் பேங்க் மற்றும் நிதியமைச்சக ஆவணங்களில், பொது மக்களுக்கு தெரியாமல் முழுமையாக மறைக்கப்பட்டன.
தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காகவும், அவற்றை பின்னாளில் காசாக்கித் தந்ததற்காகவும், பிப்ரவரி 2017 முதல்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அரசிடம் எவ்வளவு கட்டணம் பெற்றது  என்ற விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, எஸ்பிஐ தகவல் அளிக்க மறுத்து விட்டது.
ஆனால், இதற்கு முன்னதாக, ஓய்வுபெற்ற கப்பல்துறை அதிகாரி லோகேஷ் பத்ரா கேட்டு பெற்ற தகவல்களின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நிதி அமைச்சகத்திடமிருந்து, 10 தொகுதிகளாக, மார்ச் 2018 முதல் மே 2019 வரையிலான காலத்தில் 5,832 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்கு, 3.24 கோடியை கட்டணமாக பெற்றுள்ளது தெரிய வருகிறது.   ஒவ்வொரு 1000 ரூபாய் மதிப்பிலானா பத்திரத்துக்கும், எஸ்பிஐ 5.5 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது.   டிஜிட்டல் வடிவிலான 1000 ரூபாய்  பத்திரம் ஒன்றுக்கு 12 ரூபாயும், காகித வடிவிலான பத்திரங்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்திய ரூபாயை அச்சடிக்கும் நாசிக்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட இந்திய அச்சகம்,  ரகசிய குறியீட்டு எண் உள்ள ஒவ்வொரு பத்திரத்துக்கும் 25 ரூபாயை எஸ்பிஐ வங்கியிடமிருந்து வசூலிக்கிறது. இந்த தொகைகள் சிறிய அளவிலானவை என்று தோன்றலாம்.   ஆனால், இந்த தொகையை ஏன் நன்கொடை அளிக்கும் செல்வந்தர்களிடமோ, நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளிடமோ பெறவில்லை என்பதுதான் முக்கிய கேள்வி.
இந்திய ரிசர்வ் வங்கி, தொடக்கம் முதலே, தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.   ஜனவரி 2017ல், நிதி அமைச்சகம்,  இத்திட்டம் குறித்து நிதி அமைச்சகத்தின் கருத்தைக் கேட்டது.   தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஆர்.பி.ஐ, பின்னாளில் தயக்கத்தோடு சம்மதம் தெரிவித்தது.   செப்டம்பர் 2017ல், நிதி அமைச்சகம், “தேர்தல் பத்திரங்களை வெளியிடும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றம், ஆர்.பி.ஐக்கு எவ்வளவு கமிஷன் தொகை வழங்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை, நிதி அமைச்சக அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பியது.

அந்த நேரத்தில், நிதி அமைச்சகம், இந்த செலவுத் தொகையை, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியே வழங்கலாம் என்று ஆலோசனை சொன்னது.   நன்கொடை அளிப்பவர்கள் இந்த செலவை ஏற்க வேண்டாம் என்றும் கூறியது.
ஆனால், நிதி அமைச்சகம் இத்தகைய அழுத்தத்தை கொடுத்தும், நிதி அமைச்சக உத்தரவுகளை, ஆர்.பி.ஐ, செயல்படுத்த மறுத்தது.   இதன் காரணமாக, நிதி அமைச்சகம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை, இத்திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்திக் கொண்டது.
28 அக்டோபர் 2017 அன்று, நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர், ஒரு குறிப்பை எழுதுகிறார்.  அதில் அவர் “காகித வடிவிலான ஒரு தேர்தல் பத்திரத்தை தயாரிக்க ஆகும் செலவு, உதாசினப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால், இந்த தேர்தல் பத்திரங்களை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் மட்டும் வெளியிடலாம்” என்று அந்த குறிப்பில் பதிவு செய்தார்.
தேர்தல் பத்திரங்களை செயல்படுத்துவது, அதிக செலவு பிடிக்கும் விவகாரம் என்பது முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது இந்த குறிப்பில்தான்.

ஆனால், கோடிக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் செல்வந்தர்கள் / கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்த மிகச் சிறிய செலவுத் தொகையை கூட ஏற்கக் கூடாது என்று நிதி அமைச்சகத்தில் முடிவெடுக்கப்பட்டது.  வங்கிகளுக்கு ஆகும் செலவை நிதி அமைச்சகம் ஏற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.   எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய வரிசெலுத்தும் குடிமக்கள் இந்த செலவை ஏற்றுக் கொள்வார்கள்.
நவம்பர் 2017ல், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட புதிய விதிகள், இதைத் தெளிவாக்கின.    “தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வங்கிகளுக்கு ஆகும் செலவை, மத்திய அரசு ஏற்கும்” என்று கூறியது அந்த விதி.

இந்த விதி மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டபோது, நிதி அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம், 19 டிசம்பர் 2017 அன்று ஆலோசனை நடத்தியது.    அந்த விவாதங்களின் முடிவின்படி, இந்திய தொகுப்பு நிதியில் இருந்து (Consolidated fund of India)தேர்தல் பத்திரங்களுக்கு ஆகும் செலவை, எஸ்பிஐ வங்கிக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை வெளியிட வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. மாறாக, இந்த விதிகள், பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கப்படாத நிர்வாக விதிகளாக இருக்கும் என்பதும் முடிவு செய்யப்பட்டது.

அந்த வரைவு விதிகள், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக, எந்த விதமான கமிஷனோ, இதர கட்டணத்தையோ, பத்திரங்களை வாங்குபவர் செலுத்த வேண்டியதில்லை”.   ஆனால், இந்த கட்டணத்தை யார் ஏற்பார்கள் என்பதை அந்த விதிகள் குறிப்பிடவில்லை.

எஸ்பிஐ வங்கி, கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என்பது, விதிகளில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியது.  எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ஜி.ரவீந்திரநாத், “விதிகளின் பத்தி 10, துணை பத்தி (b)ன்படி, “தேர்தல் பத்திரங்கள் வெளியிடும் வங்கிக்கு ஆகும் செலவை மத்திய அரசு ஏற்கும்” என்று உள்ளது நீக்கப்பட்டுள்ளது.  இந்த விதி, மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.  அப்படி இல்லையென்றால், பத்திரங்களை வாங்குவோர் இதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று விதிகளில் சேர்க்கப்பட வேண்டும்” என்று அவர் நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் எஸ்பிஐ அளித்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.   விதிகள் இறுதியாக வெளியிடப்பட்டபோது, நன்கொடை அளிப்பவரோ, நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளோ, தேர்தல் பத்திரங்களுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடவில்லை.   இந்தச் செலவுகளை அரசு ஏற்கும் என்பதும் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டது.
பத்திரங்கள் முதன்முதலாக மார்ச் 2018 முதல் விற்பனைக்கு வந்தன.   4 ஏப்ரல் 2018 அன்று, எஸ்பிஐ, தேர்தல் பத்திரங்களுக்கு ஆகும் செலவுகளை, நிதி அமைச்சகம் வங்கிக்கு தர வேண்டும் என்று கடிதம் எழுதியது.    ஒவ்வொரு முறை தேர்தல் பத்திரங்கள் விற்பனை முடிந்ததும், அந்த செலவுக்கான பட்டியலை, எஸ்பிஐ, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியது.  கடைசியாக, 27 மே 2019 அன்று,  மத்திய நிதி அமைச்சகத்துக்கு எஸ்.பி.ஐ அனுப்பிய பட்டியல் ஹப்பிங்டன் போஸ்ட் வசம் கிடைத்தது.
மத்திய அரசின் பாதுகாக்கப்பட்ட அச்சகமும், நிதி அமைச்சகத்துக்கு, பத்திரம் அச்சடிக்கும் செலவுகளை தருமாறு கடிதம் எழுதியது.  அக்டோபர் 2018ல், இது வரை தேர்தல் பத்திரங்கள் அச்சடிப்பதற்காக, 1.67 கோடி செலவாகி உள்ளதாக அச்சகம் நிதி அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்தத் தொகை வழங்கப்பட்டது.

10 முதல் 12 தொகுதிகளாக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மத்திய அரசிடம் 3.24 கோடி ரூபாயை கேட்டது.   இத்தகைய தொகை, ஒவ்வொரு முறை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்போதும், இந்திய குடிமக்களால் ஏற்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.   டெல்லி தேர்தலை ஒட்டி, விற்பனை செய்யப்பட உள்ள தேர்தல் பத்திரங்களுக்கு எவ்வளவு கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவால் பெறப்பட்டது என்ற விபரங்களை கேட்டு,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.   அதற்கு பதில் வந்தால் மட்டுமே, 13வது முறையாக விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்களுக்கு ஆன செலவு என்ன என்பது தெரிய வரும்.


ஹப்பிங்டன் போஸ்ட் ஆங்கில கட்டுரையின் இணைப்பு
https://www.huffingtonpost.in/entry/electoral-bonds-taxes-used-for-sbi-bank-charges_in_5e317c96c5b693878a89ac2e
கட்டுரை ஆசிரியர் : நித்தின் சேத்தி.

கருத்துகள் இல்லை: