திங்கள், 27 ஜனவரி, 2020

கரோனா" வைரஸ்.. வவ்வால்களிலிருந்து பாம்புக்கும்.. பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கும்?

tamil.oneindia.com - hemavandhana : பெய்ஜிங்: சீனர்களின் உணவுப் பழக்கம் நமக்கு தெரிந்ததுதான். பறப்பன, ஊர்வன, நீந்துவன என்று எதையும் விட மாட்டார்கள். இன்று அதுதான் அவர்களுக்கு வினையாக வந்துள்ளதாக சொல்கிறார்கள். அதாவது வவ்வால், பாம்பு போன்றவற்றிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியிருக்கிறதாம்.
சீனாவின் வூஹான் மாகாணமே அலறிப் போய்க் கிடக்கிறது. அந்த மாகாணத்தில்தான் மிகப் பெரிய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. பல நூறு பேர் பலியாகியுள்ளனர். சிகிச்சை அளித்த டாக்டரே பலியாகி விட்டார்.
வூஹானை விட்டு வெளியே வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த கரோனா வைரஸானது விலங்குகளிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதுவரை வூஹான் மாகாணத்தில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ஸ் வைரஸை பொறுத்தவரை வவ்வாலிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவியது. அதே போலத்தான் இப்போதும் வவ்வாலிலிருந்து இந்த கரோனா வைரஸ் பரவியிருப்பதாக சொல்கிறார்கள். வவ்வாலிலிருந்து பாம்புகளுக்குப் பரவி பாம்புகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருப்பதாக கருதப்படுகிறது. சீனர்கள் பாம்புக் கறி பிரியர்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சார்ஸ் மற்றும் கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே கரோனாவைரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகையாகும். இரண்டுமே விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸுமாகும். இறந்து போன நாய்கள், கோழி, பன்றி, பாம்பு உள்ளிட்டவற்றின் உடலிலிருந்து இவை பரவுகின்றன. இங்கிருந்து மனிதர்களிடம் தாவுவது இந்த வைரஸ்களுக்கு மிகவும் சுலபமானதும் கூட.
இறைச்சிக் கடைகள் சுத்தமில்லாமல் இருப்பது, தூய்மையற்ற ஆரோக்கியமற்ற முறையில் இறைச்சிகளை வெட்டி விற்பது உள்ளிட்ட காரணங்களால் மிக வேகமாக கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சொல்கிறார்கள். மேலும் சீனாவில் மக்கள் தொகையும், மக்கள் நெருக்கமும் அதிகம் என்பதும் இன்னொரு காரணமாகும்.
அதிலும் இந்த வவ்வால்கள் மூலமாகத்தான் மிகப் பெரிய பாதிப்பை கடந்த 45 ஆண்டுகளில் உலகம் சந்தித்துள்ளது. அதாவது இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்புகளில் மிகப் பெரிய 3 வைரஸ் பாதிப்புகளுக்கு வவ்வால்கள்தான் காரணமாக இருந்துள்ளன. எபோலா வைரஸ் பாதிப்பு மூலம் 13,500 பேர் கடந்த 1976ம் ஆண்டு முதல் பலியாகியுள்ளனர். அதேபோல மெர்ஸ் என்ற வைரஸ் பாதிப்பு 28 நாடுகளை உலுக்கி எடுத்தது. நிபா வைரஸ் பாதிப்பு மூலம் பெரும் பாதிப்பையும் நாடுகள் சந்தித்தன.
இப்போது வந்திருக்கும் பாதிப்பிலிருந்து மீளத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் படு தீவிரமாக எடுத்து வருகிறது சீனா. மேலும் பாம்புக் கறி உள்ளிட்டவற்றை தவிர்க்கவும் சீனர்கள் ஆரம்பித்து விட்டனர். வைரஸ் முற்றிலும் ஒழியும் வரை பாம்பு பக்கமே தலை வைத்துப் படுக்காமல் இருக்கவும் பலர் முடிவு செய்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளனராம்

கருத்துகள் இல்லை: