திங்கள், 27 ஜனவரி, 2020

நீட் - பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உச்சா நீதிமன்றம்!

மின்னம்பலம் : மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விலிருந்து பின் வாங்கப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 27) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2016ல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த 3 ஆண்டுகளாகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக் கனியாக மாறிவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதில் நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 27) நீதிபதிகள் அருண் மிஷ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை மாற்ற முடியாது என்று நீதிபதி அருண் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், “ நீட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியாக உள்ளது. அதில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்த அவர், “நீட் தேர்விலிருந்து ஒரு தனியார் கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா?, மருத்துவத்துக்கான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை மாற்றியமைப்பதுதான் நீதிமன்றத்தின் வேலையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுமட்டுமின்றி, நான் இந்த நீதிமன்றத்தில் இருக்கும் வரை நீட் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடைபெறும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை நீட் தேர்வை கடைப்பிடிக்கும் போது நீங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என்று சிஎம்சிக்கு கேள்வி எழுப்பியதுடன், இந்த மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தார் .
முன்னதாக, நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய இரு சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் அதே சமயத்தில் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: