திங்கள், 18 நவம்பர், 2019

இலங்கை தமிழர்கள் அதிகாரத்தோடு இணைந்து செல்வதுதான் நல்வழி ... சமுகவலையில் ஒரு அலசல்

வேதநாயகம் தபேந்திரன் : எதிர்ப்பு அரசியல் எமக்கு நன்மை தராது
எனத்தான் வரலாறு சொல்கிறதோ?
சிறுபான்மை இனங்களின் வாக்குகள் தான் இலங்கையில் ஜனாதிபதி பதவியைத் தீர்மானிக்கும் என்பது இம் முறை பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை இனம் தனித்து நின்றே தமது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.
ராஜபக்சாக்கள் 2005 ஆம் ஆண்டின் பின்பான அரசியலைத் தீர்மானிக்கின்ற சக்திகள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்து விட்டார்கள். குடும்ப ஆதிக்க அரசியலைச் சிங்கள மக்கள் விரும்புவதைச் செய்தியாகச் சொல்லி உள்ளார்கள்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பெயரளவில் இருந்தாலும் உண்மையான ஆட்சியாளராக மகிந்த தான் இருக்கப் போகின்றார்.
2015 ஜனவரியில் ரணில் சந்திரிகா கூட்டு மைத்தரியைப் பயன்படுத்தி அவரைத் தோற்கடித்தது. அதிகாரபலம் அதிகமுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவி பறிபோன போதும் அவர் கலங்கி ஓடாமல் அதே வருடம் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக சாதாரண உறுப்பினராகினார்.
அவரது போராட்டக் குணம் யாருக்கும் வராது. இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தானே இருப்பேன் என்ற போராட்டக் குணம் மீண்டும் தலைமைத்துவத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்கள் மூலமாக பலம் பொருந்திய அரசாங்கத்தை நிறுவ உள்ளார்.
அதாஉல்லா தவிர்ந்த பெரும்பாலான முஸ்லீம் கட்சிகள் கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்து நின்றன.


விரைவில் அமையப் போகும் ராஜபக்சக்களின் அரசாங்கத்தில் அதாஉல்லா சக்தி வாய்ந்த அமைச்சராக உருவெடுக்கப் போகின்றார்.
ரவூப் ஹக்கிம்,ரிசாட் பதியுதீன் போன்றோரும் ஓரிரு வாரங்களில் ஓசைபடாமல் பதவியேற்றுக் கொள்ளுவார்கள்.
அதே போல டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் போன்றோரும் கபினெட் அமைச்சர்களாகி விடுவார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமை போல எதிர்ப்பு அரசியலையே தொடரும்.
ரணில்- மைத்திரி கூட்டு நல்லாட்சி என்ற பெயரில் அரசு அமைத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியக பங்காளியாக இணைந்து கொண்டது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள், சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை யாவும் விலக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கடிக்க வரும் நாயையே காவலாளியாக்கும் ராஜதந்திர வித்தையை வழமை போலவே சிங்கள ஆட்சியாளர்கள் செய்து கொண்டார்கள்.
இவ் வருடம் ரணில் அரசாங்கத்தைக் காப்பாற்றியதன் கம்பெரலிய அபிவிருத்தி அரசியலைத் த.தே.கூ தத்தெடுத்துக் கொண்டது.
பலநூறு கோடி ரூபாக்கள் அபிவிருத்தியாக வந்தது.
சிங்கள ஆட்சியாளரை எதிர்த்து நாம் ஒரு போதும் உருப்பட மாட்டோமென்பது தான் காலாதி காலம் வரலாறு சொல்லித் தரும் செய்தி.
அரசுடன் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை எடுத்து எமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வது தான் ஒரே வழி.
எதிர்ப்பு அரசியலால் ஒன்றும் ஆகப் போவதில்லையென வரலாறு கற்றுத் தருகிறது.

கருத்துகள் இல்லை: