வியாழன், 21 நவம்பர், 2019

தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் பெண் பிறப்பு வெகுவாக குறைந்துள்ளது. ... பாலின சமத்துவும் பாதிப்பு .

Dr.ஃபரூக் அப்துல்லா : கடந்த வாரம் 17 நாட்களே வயதான ஒரு பெண் சிசுவை
உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர் என்ற செய்தியைப் படித்ததில் இருந்து வெகு நாட்களாக எழுத வேண்டி இருந்த இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.
நான் மாவட்ட அளவிலான சுகாதார இயக்கத்தின் துணை மேலாளராக பணி புரிகையில் பல சிசு மரண ஆய்வுகளில்( Infant death audit) பங்கேற்றுள்ளேன்.
அந்த ஆய்வுகளில், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களின் மரணங்கள் அனைத்தும் அக்குவேறு ஆணிவேராக ஆராயப்படும்.
ஆட்சியர் , இணை இயக்குநர் சுகாதாரம் , துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் , குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல துறைத்தலைவர்கள் போன்ற அனுபவத்திலும் அறிவிலும் சிறந்த மக்கள் ஆய்வு செய்வர்.
எங்கு தவறு நடந்தது?
அந்த சிசுவை காப்பாற்றியிருக்க முடியுமா?
யாருடைய தவறால் இது நடந்தது?
என்றெல்லாம் ஆராயப்பட்டு முடிவுகள் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவர்களுக்கு செயல்வடிவமாக மாற்றி அனுப்பப்படும். இதன் மூலம் புது protocol கள் உருவாகும்.
இதில் பல நேரங்களில் அனுபவம் வாய்ந்த மக்கள் கூறக்கேட்டதுண்டு
"Unless proved otherwise , a female infant death should be considered as an infanticide"
அதாவது வேறு காரணங்களினால் மரணமடைந்தது என்று நிரூபணமாகாதவரை, அனைத்து பெண் சிசு மரணமும் சிசுக்கொலையாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது.? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்
சென்னை , ராம்நாடு முதலிய எட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவு பெண் பிறப்பு குறைந்துள்ளது.
நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000 ஆண்குழந்தைக்கும் 936 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன .
அதுவும் சில மாவட்டங்களில் 900க்கும் கீழ் இருக்கிறது.
எதனால் இந்த ஏற்றத்தாழ்வு?
நமக்கு பக்கத்தில் இருக்கும் கேரளாவில் ஒவ்வொரு 1000 ஆண் பிள்ளைகளுக்கும் 1084 பெண் பிள்ளைகள் பிறக்கிறார்கள்
ஆனால் நமது மாநிலத்தில் 936 : 1000 என்ற வேறுபாடு இருக்கிறது.
இது பாலின ஏற்றத்தாழ்வு( gender imbalance) நிலைக்கு வழிவகுக்கும்
இங்கு நிலவும் இந்த பாலின ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம்
1. வரதட்சணை தரும் பயம்
2. பெண் குழந்தைகள் கடின வேலைகளுக்கு உதவ மாட்டார்கள்
3. ஆண் பிள்ளை தான் வாரிசு. அவனால் தான் பரம்பரையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற மூடநம்பிக்கை . இதனால் வரும் சமூக அழுத்தம்.
இதனால் பெண் குழந்தைகள்
கருவிலேயே கண்டறிந்து கொல்லப்படுகிறார்கள்.
ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுகிறது. கண்டறியப்பட்டவுடன்
குறியற்ற பெண் சிசு என்றால் குறி எதுவும் இல்லாமல் கொல்லப்படுகிறது.
மீறிப்பிறந்த பெண் குழந்தைகள் எங்காவது பொது நவீன கக்கூஸ்களில் கழிக்கப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டியில் அந்த ஏரியா தெரு நாய்களுக்கு இரவு விருந்தாக்கப்படுகின்றன.
எனது இந்த பதிவின் முக்கிய நோக்கம்
இந்த பாலின ஏற்றத்தாழ்வினால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவது தான்
உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகளில்
ஆரோக்கியமான பாலின விகிதம் என்பது ஒவ்வொரு 1000 பெண் குழந்தை பிறப்பிக்கும் 1005 ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது தான்.
இந்த 1.05 என்ற பெண்களுக்கு ஆண்கள் விகிதம் அனைத்து வயதுகளிலும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும்
ஆனால் இந்தியாவில் இந்த விகிதம் 1.07 முதல் 1.14 என்ற அளவில் அதிகமாக இருக்கிறது.
இதனால் என்ன நடக்கும் தெரியுமா?
- 15 முதல் 20 சதவிகிதம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்க மாட்டார்கள் இதனால் திருமணம் செய்யும் வயதைத்தாண்டி முதிர் கண்ணன்களாய் பல ஆண்கள் வாழும் நிலை ஏற்படும்.
இதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்
இதன் விளைவாக
ஆண்கள் மனத்தாழ்வு நிலைக்கு செல்ல வாய்ப்புண்டு .
மது / புகை போன்ற வஸ்துக்களுக்கு அடிமையாவதுண்டு
திருமணம் அல்லாத உறவுகளை நாட அதிக வாய்ப்பு உருவாகிறது.
திருமணமான பெண்களின் வாழ்க்கையில் நுழைந்து அவர்கள் வாழ்க்கையில் விளையாட வாய்ப்புள்ளது.
இவையனைத்தையும் அன்றாட நிகழ்வுகளில் நாம் கண்டு தான் வருகிறோம்
- அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த ஆய்வில் ஆண்கள் பிறப்பு விகிதம் சராசரியை விட அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடந்தேறின என்கிறது ஆய்வு
அதாவது ஆண்கள் விகிதம் அதிகமானால் பெண்களுக்கு எதிரான வண்புணர்வு / கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இதை derangement in operational sex ratio என்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை குழந்தை பிறக்க வைக்கும் தகுதியுடைய ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து அங்கே ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை அமையும் என்கிறார்கள்.
ஒரு ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான ஆண்கள் 100 பேர் இருக்கிறார்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அதே ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான வயதில் 80 பெண்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அங்கே
-திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளும் நிகழ்வுகள்( premarital sexual contact)
- அதனால் ஏற்படும் கர்ப்பங்கள் ( premarital conception)
- அதனால் நிகழ்த்தப்படும் அபார்சன்கள்
என்று ஒரு வட்டம் நடந்து கொண்டே இருக்கும்.
மேலும் அந்த ஊர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருந்தால் அந்த இளைஞர்களுக்கு வேலை இல்லாததால் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.
சிறுபான்மையாக இருக்கும் பெண்கள் மீது
Eve teasing
கூட்டு பலாத்காரம்
போன்ற விசயங்களை மது / புகை / கஞ்சா போன்ற அடிமைத்தனங்களில் சிக்கி விளைவிப்பார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.
மேலும்
அந்த பகுதியின் பெண்களுக்கு சரியான கணவனை தேர்ந்தெடுக்க போதுமான வாயப்பு வழங்கப்பட மாட்டாது.
சரியான படிப்பு இல்லாத
திருமணத்தகுதி இன்னும் வராத
உழைத்து தன்னை காப்பாற்ற இயலாத ஒருவரை கணவனாக அவள் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவாள்.
இதனால் மிக அதிகமான அளவில் விவாகரத்துகள்
இல்லறங்களில் நிகழும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
வரதட்சணை கொடுமைகள்
அதனால் கொலைகள்
தற்கொலைகள் ( ஆண் பெண் இருதரப்பிலும் நிகழலாம்)
அதிகரிக்கும்.
ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை என வருடம் 1,32,000 பெண் குழந்தைகளை கொல்லும் தேசமான நாம்
இதைப்பற்றி சிந்தித்தே ஆக வேண்டும்.
யாராவது ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கேட்கும் தாய் இருந்தால்..
இந்த பதிவை அவர்களிடம் படித்துக் காட்டுங்கள்
பெண்கள் இல்லாத ஊரில்
ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது
இதுவே வரலாற்றுப்பாடம்
நன்றி
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை<

கருத்துகள் இல்லை: