வெள்ளி, 22 நவம்பர், 2019

கோயில் நிலங்களுக்குப் பட்டா: இடைக்காலத் தடை!

கோயில் நிலங்களுக்குப் பட்டா: இடைக்காலத் தடை!மின்னம்பலம் : கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்கும் அரசாணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 22) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருப்பதாகவும், இதற்குத் தடை விதிக்க கோரியும் ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்குத் தமிழக அரசு சார்பில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆட்சேபனைக்கு உரியப் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கோயிலுக்குத் தேவைப்படாத நிலங்களை ஏழைகளுக்குப் பட்டா வழங்கப்படுவது குறித்தும், அந்த நிலங்களின் விலையைக் கோயிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு கடந்த 18ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிப்பாட்டுத் தலங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாதா? இந்த அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலையத் துறையை அரசு வற்புறுத்துகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38000 கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு? இதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு? ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களின் விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இவ்வழக்கு மீண்டும் இன்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கக் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அரசு பிறப்பித்த அரசாணைக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: