திங்கள், 16 செப்டம்பர், 2019

ஃபரூக் அப்துல்லா சிறையில் .. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் .. வைகோவால் வெளிவந்த உண்மை!

ஃபரூக் அப்துல்லாவின் நிலை: வைகோவால் வெளிவந்த உண்மை!மின்னம்பலம் : காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவை மத்திய அரசு, ‘பொது பாதுகாப்பு சட்டத்தின்’ கீழ் சிறை வைத்திருக்கிறது என்றும், சுமார் இரு வருடங்கள் வரை இந்த காவல் நீடிக்கலாம் என்றும் காஷ்மீர் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஃபரூக் அப்துல்லா செப்டம்பர் 15 ஆம் தேதி மதிமுக நடத்தும் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் பங்கேற்ப ஒப்புதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆகஸ்டு 4 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட மூத்த காஷ்மீரி தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஆகஸ்டு 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சசிதரூர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நான் நான்காவது முறையாக சொல்கிறேன். ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை, அவர் நலமாக அவரது வீட்டில் இருக்கிறார். இதை பத்தாவது முறையாக சொல்வதற்கும் எனக்குப் பொறுமை இருக்கிறது” என்று கூறினார்.

ஆனால், ஃபரூக அப்துல்லா மதிமுக மாநாட்டுக்கு வர முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதன் நோக்கம், ஃபரூக் அப்துல்லாவை உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து நேர் நிறுத்த வேண்டும் என்பதே.
இந்த மனு இன்று (செப்டம்பர் 16) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வைகோ சார்பில். வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் வாதாடினார்.
“பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார் என்று, ஒரு தரப்பு அரசுப் பிரிவு சொல்கின்றது. அவர் வீட்டுச் சிறையில் இல்லை என்று மற்றொரு தரப்பு அரசு பிரிவு கூறுகின்றது. அப்படி என்றால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரைப் போய் சந்திப்பார்களா? பருக் அப்துல்லா அவர்களின் 40 ஆண்டுக்கால உயிர் நண்பர் வைகோ. அதனால்தான் ம.தி.மு.க. மாநாட்டுக்கு அழைத்தார். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டு இருந்தார். ஆனால் இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்புகொள்ள முடியவில்லை. நெருக்கடி நிலை காலத்தைப் போல அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டுவிட்டனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது” என்று வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதங்களை வைத்தார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இரத்த சொந்தங்கள் தவிர்த்து மற்றவர்களுக்குத் தகவல் தர இயலாது. அதற்கான ஆட்கொணர்வு மனுவாக இதைப் பார்க்க முடியாது” என்று பதில் கூறினர். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் , “30 ஆம் தேதிக்குள் அரசு இதற்கு பதில் கொடுக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
வைகோ தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஃபரூக் அப்துல்லா பற்றி நோட்டீஸ் அனுப்பியதும் காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் இதுபற்றிதுருவ ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் ஃபரூக் அப்துல்லாவை வீட்டுக்காவல் என்பதில் இருந்து பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று (செப்டம்பர் 15) முதல் கைது செய்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.
“செப்டம்பர் 16 ஆம் தேதி திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா மீதான வைகோவின் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு விசாரணைக்கு வர இருப்பது தெரிந்ததும் மத்திய அரசு, செப்டம்பர் 15 ஆம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. இந்த சட்டப் பிரிவின்படி ஃபரூக் அப்துல்லா இரு வருடங்கள் வரை சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம். இதன்படி ஸ்ரீநகரிலுள்ள ஃபரூக் அப்துல்லாவின் குப்கர் ரோடு சாலையிலுள்ள அவரது வீடே துணை சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. வீட்டில் அவர் உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. ஃபரூக் அப்துல்லாவின் பொதுப் பாதுகாப்பு சட்ட கைதினை உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைக் கழகம் நேற்று அனுமதித்திருக்கிறது. எனவே ஃபரூக் அப்துல்லாவின் வீடே இப்போது சிறையாகியிருக்கிறது” என்கிறார்கள் காஷ்மீர் நிர்வாகத்தை விசாரித்து அறிந்த ஆங்கிலப் பத்திரிகையாளர்கள்.
ஆகஸ்டு 6 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில், “ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவே இல்லை” என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், இப்போது வெளிவந்துள்ள தகவல்கள் அமித் ஷாவின் நாடாளுமன்ற பதிலுக்கு முற்றிலும் முரண்பாடான நிலையில் இருக்கின்றன.
வைகோவின் ஹேபியஸ் கார்ப்பஸ் மூலம்தான் இந்தத் தகவல்கள் இப்போது வெளியே வந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

கருத்துகள் இல்லை: