திங்கள், 16 செப்டம்பர், 2019

நடிகை காயத்திரி ஸ்ரீ ராம் : இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை!

வெப்துனியா :  இந்தி மொழியை தமிழக
மாநிலத்திற்குள் நுழைய விடாமல் கடந்த 50 வருடங்களாக கட்டிக்காத்து வருகின்றது திராவிட கட்சிகள். ஆனால் அதே நேரத்தில் திராவிட கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இந்தி நன்றாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்.இ பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் இந்தி உள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தியை கற்றுவிடக்கூடாது என்ற கொள்கையில் திராவிட கட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை சமீபத்தில் தெரிவித்த அமித்ஷாவுக்கு திராவிட கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழுக்காக பல தியாகங்கள் செய்த இந்த கட்சிகள் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை தமிழக மக்கள், நமக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தி திணிப்பு குறித்து நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தெரிவிக்கையில்,
‘இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்றும், தாய்மொழிக்கும் தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தி பொது மொழியாக பேசப்பட்டு வருவதால் இந்திய மக்கள் இணைவதற்கு இந்தி வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பள்ளி செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது போல் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வழக்கம்போல் தமிழையே உயிர் மூச்சாக கொண்டிருக்கும் சமூக வலைத்தள பயனாளிகள் காயத்ரியின் இந்த கருத்துக்கு நாகரீகமான தங்களது எதிர்ப்புகளையும், எந்தவித உள்நோக்கமும் இன்றி மரியாதையான வார்த்தைகளிலும் விமர்சனம் செய்து வருகின்றனர்.<

கருத்துகள் இல்லை: