வியாழன், 19 செப்டம்பர், 2019

சந்திரலேகா ( சு.சாமி) - சசிகலா சந்திப்பில் வைகுண்டராஜனுக்கு என்ன பங்கு?

சந்திரலேகா- சசிகலா சந்திப்பில் வைகுண்டராஜனுக்கு என்ன பங்கு?மின்னம்பலம் : பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குச் சென்று அங்கே அடைக்கப்பட்டிருக்கிற சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
முதன் முதலில் வெளியிட்ட மின்னம்பலம்
இதை முதன் முதலில் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தியது தமிழின் முதல் மொபைல் தினசரியான மின்னம்பலம்தான். ‘சசிகலா- சந்திரலேகா சந்திப்பு! அதிமுகவில் சமரச அறிகுறி’ என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் பிறகே மற்ற ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இந்த சந்திப்பு குறித்து கவனிக்க ஆரம்பித்தன.
2017 இல் கூவத்தூர் படலம், எடப்பாடி முதல்வரானது, சசிகலா சிறைக்குச் சென்றது முதல் இப்போது வரை பாஜகவிலேயே வித்தியாசமானவராக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது தூதுவராகத்தான் சந்திரலேகா சிறைசென்று சசிகலாவை சந்தித்ததாகவும் அதிமுக- அமமுக இணைப்பு பற்றி பாஜக நடத்தும் ஆபரேஷனின் ஒரு பகுதிதான் இது என்றும் இந்த சந்திப்பு பற்றி தகவல்கள் கிடைத்தன.

அரசியல் தாண்டி இன்னொரு காரணம்
இந்நிலையில் அரசியலைத் தாண்டி இன்னொரு முக்கியமான உள்நோக்கமும் இந்த சந்திப்பின் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகால நிலவரத்தை அறிந்தவர்கள். பாஜகவின் தூதராக மட்டுமல்ல, தாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் விவி மினரல்ஸ் தொழிலதிபர் வைகுண்டராஜனின் தூதுவராகவும்தான் சந்திரலேகா சிறை சென்று சசிகலாவை சந்தித்திருக்கிறார் என்பதுதான் அவர்கள் சொல்லும் இன்னொரு கோணம்.
நிதி நெருக்கடியில் ஜெயலலிதா
இதுபற்றி விசாரிக்கையில் பல பழைய சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்கள்.
“1989, 90-களில் ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றி தலையெடுத்த காலகட்டத்தில் அவருக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. பணபலம் மிக்க அதிமுக தலைவர்கள் பலர் ஜானகி அணியில் இருந்தனர். அணிகள் இணைந்து அதிமுக என்ற கட்சி ஜெயலலிதாவிடம் வந்து விட்டபோதும், அவர்கள் ஜெயலிதாவுக்காக செலவு செய்யத் தயங்கினார்கள்.
அந்த நிலையில் ஜெயலிதாவோடு இருந்த சசிகலா, யாரிடமாவது பெருந்தொகையை கடனாகக் கேட்கலாம் என்று முயற்சித்துக் கொண்டிருந்தார். பல்வேறு நபர்களிடமும் இதுபற்றி சொல்லி வைத்திருந்தார். அவர்களில் ஒருவர்தான் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனும். 1989 ஆம் ஆண்டில்தான் விவி மினரல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டிருந்தது. தனக்கு இருந்த சில தொடர்புகள் மூலமாக வைகுண்டராஜனிடமும் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார் சசிகலா.
வைகுண்டராஜன் எடுத்துச் சென்ற மஞ்சள் பைகள்
இந்த சூழலில் ஒரு நாள் காலை வைகுண்டராஜன் ஒரு ஆட்டோவில் போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டு வாசலுக்குச் சென்றிறங்கினார். அவரை சசிகலா வாசலில் இருந்து வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல ஜெயலலிதா எழுந்து வந்து வைகுண்டராஜனை வரவேற்றார். அவருக்கு இனிப்புகள் கொடுத்து கார்டனில் உபசரித்தனர்.
அப்போது தன்னிடம் இருந்த இரண்டு மஞ்சள் பைகளை ஜெயலலிதாவிடம் கொடுத்து, ‘இந்தாங்க வச்சிக்கங்க’ என்று கூறினார் வைகுண்டராஜன். அந்த இரண்டு மஞ்சள் பைகளிலும் சேர்த்து 3 கோடி ரூபாய் இருந்தது. 30 வருடங்களுக்கு முன்பு 3 கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய பணம். அதைப் பார்த்து பிரம்மித்த ஜெயலலிதா, ‘வட்டியெல்லாம் கரெக்டா கட்டிடறோம்’ என்று வைகுண்டராஜனிடம் உறுதிகொடுத்தார்.
ஆனால் வைகுண்டராஜனோ, ‘என்ன சொல்றீங்க? உங்களுக்கு கடன் கொடுக்கவா வந்தேன். இனிமே தமிழ்நாட்டில நீங்கதான் எல்லாமே. உங்களுக்கு உதவி செய்யுறதுக்கு சந்தர்ப்பம் கொடுத்ததுக்காக ஆண்டவனுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்’ என்று ஜெயலலிதாவைப் புகழ்ந்தார்.
உச்சத்தைத் தொட்ட கார்டன் -விவி நெருக்கம்
அப்போது தொடங்கிய கார்டனுக்கும் வைகுண்டராஜனுக்குமான நட்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜெ. ஆட்சியைப் பிடித்ததும் விஸ்வரூபமாய் வளர்ந்தது. பின்னாட்களில் ஜெயா தொலைக்காட்சியில் அதிக பங்கு வைத்திருக்கும் தொழிலதிபர் என்ற அளவுக்கு ஜெயலலிதாவுக்கும், வைகுண்டராஜனுக்கும் நெருக்கம் அதிகரித்தது. அதிமுகவின் தலைமைக் கழகம் கட்டுவதற்காக சென்னை அண்ணா சாலையில் சஃபயர் திரையங்கம் வாங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் வாஸ்து சரியில்லை என்பதால், அதிமுக தலைமைக் கழகம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.
சஃபயர் தியேட்டர் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்கள் குருவாயூரில் ஹோட்டல்கள், தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பல சொத்துகள் என சசிகலா -வைகுண்டராஜன் தரப்பினரால் வாங்கப்பட்டன. அதாவது இரு தரப்பினரும்தான் சொத்து வாங்குவார்கள். ஆனால் அவரவர் பெயர்களில் வாங்கமாட்டார்கள். பல்வேறு நபர்கள் மூலம் சொத்துகளை வாங்கிக்குவித்தார்கள்.
மோதலாய் மாறிய நட்பு
ஒருகட்டத்தில் கார்டனுக்கும், வைகுண்டராஜனுக்கும் இடையேயான நட்பில் கொடுக்கல் வாங்கலால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விரிசலானது. அப்போதுதான் விவி மினரல்ஸின் முறைகேடுகளையும், விதிமீறல்களையும் ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். தலைமையில் தனி குழுவையே நியமித்தார் ஜெயலலிதா. விவி மினரல்ஸ் மீதான நெருக்கடிகள் அதிகமாகின. இதனால் இரு தரப்பினர் சேர்ந்து வாங்கிய சொத்துகளின் நிர்வாகமெல்லாம் சசிகலா பிடியிலேயே இருந்தது.
ஏராளமான அந்த சொத்துகளில் தங்கள் பங்கினைத் திரும்பக் கேட்டுத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின் விவி தரப்பில் முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் சில மாதங்களில் சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் விவியின் முயற்சிகள் தொடர்ந்தன” என்றவர்கள் ஒரு சிறு இடைவேளை விட்டு அடுத்த கட்டத்தைத் தொடர்ந்தனர்.
விவிக்காக களமிறங்கிய சுவாமி
“விவி மினரல்ஸுக்கு அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் புள்ளிகள் நெருக்கமானவர்கள். அவர்களில் சிலர் மூலமாக சசிகலா தரப்பிடம் இருக்கும் தங்களது சொத்துகளை மீட்க முயற்சிகளை சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் வைகுண்டராஜனுக்கு மிகவும் நெருக்கமான சுப்பிரமணியன் சுவாமி மூலமாகவும் சசிகலாவிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்கள்.
ஒருபக்கம் பாஜக தரப்பின் அரசியல் ரீதியான சமரசத்துக்கு முயற்சித்த சுப்பிரமணியன் சுவாமி இன்னொரு பக்கம் வைகுண்டராஜனுக்காக சொத்துகள் விவகாரத்திலும் சசிகலா தரப்போடு பேசி வந்திருக்கிறார்.
வைகுண்டராஜனுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. வைகுண்டராஜன் இல்லத் திருமணத்துக்காக சுவாமிக்கு தனி விமானம் அமர்த்தி அழைத்து வந்தார்கள். அதேபோல சுப்பிரமணியன் சுவாமி தனது 80வது நட்சத்திர பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி, திருச்செந்தூர் கோயில்களில் வழிபாடு நடத்தினார். இதற்கான அவரது விமானப் பயணத்தையும் விவிதான் ஏற்றுக் கொண்டது. இப்படி வைகுண்டராஜனோடு மிக நெருக்கமாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவோடு அரசியல் ரீதியான சமரசம் மட்டுமல்ல, வைகுண்டராஜனுடனான சொத்து விவகாரங்களுக்காகவும் பேசுவதற்காகத்தான் சந்திரலேகாவை சிறைக்கு அனுப்பி சசிகலாவுடன் பேச வைத்திருக்கிறார்” என்று முடித்தனர்.

கருத்துகள் இல்லை: