செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கடந்த 40 வருடங்களாக சமஸ்கிருதப் பெயர்கள் அதிகம் ஏன் தென்படுகிறது?

முனைவர் விஜய் அசோகன் : கடந்த 40 வருடங்களாக சமஸ்கிருதப் பெயர்கள் அதிகம் ஏன் தென்படுகிறது?
உங்கள் தாத்தாவின் பெயர் குப்பம், சுப்பன், கருப்பன் என்று இருந்தவரை நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு ஆதிக்க வர்க்கதுக்கு சேவகம் செய்யும் வரை அந்த பெயர்கள் இருந்தன.
உங்கள் பெயர் மீண்டும் பண்டையத் தமிழ் பெயர்களாக, அழகன், இனியவன், மாறன், நெடுஞ்செழியன், இளந்தென்றல், இளவேனில் என மாறி, சமூக நீதி அரசியலால் சமத்துவ வாழ்வும் உருப்பெறத் தொடங்கி நிலைக்கத் தொடங்கியதும், ஜாதகம், கோவில் என சென்றோருக்கு எல்லாம் ஜா, ஷா வரும் பெயர்களே நாகரீகப் பெயர்கள் எனவும் தமிழில் வைத்தால் கோமாளிகளாகவும் மாற்றப்பட்டோம்.
பெயரில் என்ன இருக்கிறது?
ஒவ்வொரு ஜா, ஷா க்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது. சூழ்ச்சி இருக்கிறது.
ஜாதகம் பார்த்து, ராசி பார்க்கும் யாராலாவது தமிழில் பெயர் வைக்க முடிகிறதா? அங்கொன்றும் இங்கொன்றும் தவிர!
அப்போ இது மதத்தின் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால் தமிழை இல்லாது செய்யும் சூழ்ச்சி இல்லையா?
முன்பு தமிழன் தீட்டானவனாக இருந்தேன்...இப்போ 'தமிழே' தீட்டாக மாற்றப்பட்டுள்ளது.
சமஸ்கிரதப் பெயரை பிடித்து, தாங்களாக விரும்பி வைக்கும் தனி மனிதர்கள் தவறானவர்கள் அல்ல! அப்பெயர் அரசியல், ஆன்மீக, மத, சாதி ஆதிக்கங்களால் திணிக்கப்படும் சூழலை உணர்ந்து தமிழில் பெயர் வைப்பது நம் செயல்பாடுகளில் ஒன்றாக வேண்டும்.

என் பெயரோ விஜய். பெயர் வைத்த என் தாய், தந்தை தவறு அது. என் குழந்தைகள் பெயர் கவின் திலீபன், கதிர் நிலவன். அது நானும் என் மனைவியும் செய்த வினை.
நிகழ்காலத்தில் பல யாழினிகளும், கவித்தென்றல்கலும், இளவேனிற்களும், தமிழ்ச்செல்வன்களும் உருவாகி வருவதும் நடக்கிறது. ஆனால், தனி மனிதர்களால் இந்த மாற்றம் நிகழாமல் தமிழில் பெயர் வைப்பதே சமூக அரசியல் நிகழ்வாக மாற வேண்டும்.
நம் கையில் மட்டுமே பிடிக்க வேண்டும் என்று இருந்தத் துண்டு நம் தோளிற்கு வரவே பல போராட்டங்கள் நடந்தன.
நம் தோளில் இன்று இருக்கும் துண்டு, மீண்டும் கோவணமாகும் முன் விழித்தெழுந்து கிளர்ந்தெழுவோம்.
- முனைவர் விஜய் அசோகன்

கருத்துகள் இல்லை: