வெள்ளி, 19 ஜூலை, 2019

தமிழக அரசுப் பள்ளிகளில் வருகை பதிவு தமிழில் நிறுத்தம் .. இந்தியில் ஆரம்பம்

தமிழக அரசுப் பள்ளிகளில் இந்தித் திணிப்பு!.மின்னம்பலம : தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்யும் கணினிகளிலிருந்த தமிழ் மொழியிலான அறிவிப்பு மற்றும் கட்டளைகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்தி மொழியில் கட்டளைகள் வரத்தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணினிகள் மூலமும், நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலமும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கணினியில் தங்களது ஆதார் எண்ணை டைப் செய்து அது இணைப்பிற்கு வந்ததும், ஆசிரியர் தங்களது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்வார்கள்.

அப்போது ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை அந்த எந்திரம் திரையில் காண்பித்துச் சரி என்ற பொத்தானை அழுத்தியதும் அதைக் கணினியில் பதிவு செய்துகொள்ளும்.
இதேபோல் பள்ளி நேரம் முடிந்து வெளியே செல்லும் போதும் ஆதார் எண்ணையும், கைரேகையையும் பதிவு செய்வார்கள். இந்த நேரத்தில், கணினியின் அறிவிப்புகள் மற்றும் செயல்பாட்டுக் கட்டளைகள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களாகத் திரையில் வந்துகொண்டிருந்தது. கடந்த திங்கள் முதல் கணினித் திரையில் தோன்றும் அறிவிப்புகளில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், இரயில்வே துறை, அஞ்சல் துறை போன்ற இடங்களில் இந்தி சேர்க்கப்படுவதும், பின்னர் நீக்கப்படுவதுமாக உள்ள நிலையில், தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் தமிழ் நீக்கப்பட்டு இந்தி சேர்க்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: