ஞாயிறு, 14 ஜூலை, 2019

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் கிடையாது .... டென்மார்க்கிற்கு இணையான தமிழகத்தின் அவலம்

சிவசங்கர் எஸ்.எஸ் : மொழியை அடுத்து மெல்ல தொடரும்...
இன்று (14.07.2019) அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் இல்லாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டு விட்டன. இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இது. "ஒரே தேசம், ஒரே மொழி" என்ற தங்கள் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்.
ஏன் மாநில மொழிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்ற விளக்கம் கூட இல்லை. மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் சர்வாதிகார, எதேச்சதிகார மனப்பான்மை தான் இதிலும் வெளிப்படுகிறது. என்ன உத்தரவு போட்டாலும், எல்லோரும் ஏற்றுக் கொண்டு அடிமைகளாக நடக்க வேண்டும் என்பது தான் எண்ணம்.
தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.கவை தவிர்த்த அத்தனைக் கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்கள். ஒரு ஆயிரம் பணியிடங்களுக்கு இவ்வளவு கூச்சலா என்று கூட சிலர் நினைக்கக் கூடும். இது வெறும் ஆயிரம் அல்ல. கோடிக்கணக்கான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க போடப்படும் திட்டம்.

அஞ்சல் துறை என்பது குக்கிராமங்களுக்கு சேவை அளிக்கிற துறை. குக்கிராமங்களில் வாழ்கிறவர்கள் தாய்மொழி மாத்திரமே அறிந்தவர்களாக இருப்பார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இது தான் நிலை. இன்னும் சொல்லப் போனால், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் உள்பகுதிக்கு சென்றால் இது தான் உண்மை சூழலாக இருக்கும்.
ஆனாலும் பா.ஜ.க இப்படி மல்லுக்கட்டுவதில் தான் மொழி அரசியல் இருக்கிறது. எல்லோர் மீதும் இந்தியை திணித்து, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேசம், ஒரே ஆட்சி என்று கொண்டு போய் நிறுத்துவது தான் நோக்கம்.
இனி இந்தி தெரிந்தவர்கள் தான் மத்திய அரசில் பணியாற்ற முடியும் என்ற ஒரு சூழலை நம் மீது திணிக்கிறார்கள். இந்தி தெரிந்தவன் தான் புத்திசாலி என்ற ஓர் மாயையை இதன் மூலம் ஏற்படுத்துவார்கள். ஏற்கனவே இதை வலியுறுத்தும் ஒரு சில்லறைப் பொறுக்கும் கூட்டம் நாடு முழுதும் இருக்கிறது.
தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் படிக்கும் போதே திணறும் மாணவர்கள் உண்டு. மூன்றாம் மொழி என்பது தேவையில்லாத சுமை. இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் இந்தி படித்து, இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களோடு போட்டிப் போட்டு இந்தி தேர்வு எழுதினால், யார் முன்னே வருவார்கள். இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தான். அது தான் இயற்கை. எனவே 'இந்தி'யர்களே அறிவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்தி ஏற்றுக் கொள்ளப்பட்டால், மெல்ல அடுத்த அடி வைப்பார்கள். அடுத்து ஒரே நாடு, ஒரே ரேஷன். அது அறிவித்தாகிவிட்டது. கெடு தேதியும் சொல்லியாகி விட்டது. அடுத்து ஒரே உணவு என்பார்கள். சைவம் மட்டுமே உணவு என்பார்கள். மாட்டுக்கறி சாப்பிட்டவரை அடித்து, தமிழ்நாடு வரை 'டிரையல்' பார்க்கிறார்கள்.
அடுத்து ஒரே மதம் வரும். மற்ற மதத்தவர்களை அடித்தேக் கொல்வார்கள். சொல்வது அதீதமாகத் தோன்றலாம். ஆனால் பாசிசம் அப்படி தான் நகரும். நாட்டை விழுங்கும்.
இத்தகைய சர்வாதிகாரம், விடுதலைக் குரலை எழுப்ப செய்யும். விடுதலைக் குரல் ஓங்கி ஒலித்தால் தீவிரவாதம்.
என் வரியில் வழங்கப்படும் வேலையை எம் மக்களுக்கு கொடு என கேட்க உரிமை உண்டு. மறுத்தால், வரியை நாங்களே வசூலித்து, நாங்களே நிர்வகித்துக் கொள்கிறோம் என்ற குரலுக்கு வழி வகுத்ததாகி விடும்.
என் மொழி, என் உரிமை, என் நாடு.
# மொழியில் கை வைத்தால்...

கருத்துகள் இல்லை: