ஞாயிறு, 14 ஜூலை, 2019

அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது மதுரை உயர்நீதி மன்றம்

மாலைமலர் : நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 மதுரை . இந்தியா முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள், மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் வந்துகொண்டிருந்தன. தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எனவும், இரண்டாம் தாள் அந்தந்த மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன் இரண்டு வினாத்தாள்களுமே அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டன. இப்போது முதல் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை கடந்த 11ம்தேதி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, அஞ்சல்துறை தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு எதிராக மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வுகளுக்கு தடையில்லை. ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது.<
அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழியை புறக்கணித்தது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: