சனி, 20 ஜூலை, 2019

டி.ராஜா இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்

tamil.oneindia.com - Sherlin Sekar :  டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி. கடந்த இரண்டு முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக சுதாகர் ரெட்டி தனக்கு சளித் தொந்தரவு அதிகம் இருப்பதால் ஓய்வு கொடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் கேட்டுக்கொண்டார். 
 இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதில் தற்போதைய தேசிய செயலாளரான டி.ராஜா, கேரளத்தை சேர்ந்த பினோய் விஸ்வம், மூத்த தலைவர் அமர்ஜெத் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு டி. ராஜாவை சுதாகர் ரெட்டி பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் மாற்றம் முக்கிய அஜென்டாவாக விவாதிக்கப்பட்டு சுதாகர் ரெட்டியின் பரிந்துரையை ஏற்பது என தேசிய செயற்குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. 
இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக டி. ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார் உள்ளார். 
டி. ராஜா கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கட்சியின் தேசிய செயற்குழுவில் முக்கிய பங்காற்றுவதோடு மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்த டி ராஜா அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அம்மன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரது மனைவி ஆனி கேரளத்தை சேர்ந்தவர். அவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர்களுக்கு அபரஜிதா என்ற மகள் உள்ளார்

Read more at: https://

கருத்துகள் இல்லை: