திங்கள், 23 ஜூலை, 2018

சிவநாடார் திருப்பதிக்கு ஒரு கோடி வழங்கினார் ...

ஷிவ் நாடார் கொடுத்த நன்கொடை!
மின்னம்பலம் :ஹெச்.சி.எல்.
நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார், திருப்பதி கோயிலுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரும், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவருமான ஷிவ் நாடார் சிறந்த நன்கொடையாளராகவும் திகழ்கிறார். இவரது ஷிவ் நாடார் அறக்கட்டளையின் வாயிலாகக் கல்வி மேம்பாட்டிலும் பெரும் பங்காற்றி வருகிறார். ஜூலை 22ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்ற ஷிவ் நாடார் இரவில் தரிசனத்தை முடித்துவிட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1,00,00,001 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வரைவோலை (டி.டி.) வழியாக வழங்கப்பட்ட இந்த நன்கொடையை, திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் ஊனமுற்றோருக்கான மருத்துவமனைக்குச் செலவிடுமாறு ஷிவ் நாடார் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலைத் திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். தமிழக அளவிலும், இந்திய அளவிலும் தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஷிவ் நாடார், இதுபோன்ற நன்கொடைகளை வழங்கி பொதுச் சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவர் ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இந்திய அளவில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 14.6 பில்லியன் டாலராகும்

கருத்துகள் இல்லை: