வியாழன், 26 ஜூலை, 2018

" பங்களா " மே.வங்கம் பெயர் மாற்றம் .. சட்டப்பேரவையில் தீர்மானம்!


மின்னம்பலம் :மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்றும்
தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்க மாநிலம், மேற்கு வங்கம் என்றும் கிழக்கு வங்கம் என்றும் பிரிந்தது. பின்னர் கிழக்கு வங்கம் வங்கதேசம் நாட்டோடு இணைந்தது. தற்போது, இந்தியாவில் 6ஆவது மிகப்பெரிய பொருளாதாரத்தை உடைய மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்தே குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 26) அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியப் பின்னர் அதிகாரப்பூர்வமாகப் பங்களா என அம்மாநிலத்தின் பெயர் மாற்றப்படும்.
முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு பங்களா என பெங்காலியிலும் பெங்கால் என ஆங்கிலத்திலும் பங்கால் என இந்தியிலும் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மேற்கு வங்கம் தீர்மானம் நிறைவேற்றி மத்திர அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. எனினும், மேற்கு வங்க அரசின் இந்த கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. அதேபோல், கடந்த 2011ஆம் ஆண்டு மேற்குவங்கத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்ற வேண்டும் என அம்மாநிலம் விடுத்த கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: