ஞாயிறு, 22 ஜூலை, 2018

மம்தா பானர்ஜி : அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.


நக்கீரன் :ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுக்கு  ஆதரவாக அதிமுக வாக்களித்திருக்குமா? என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
பாஜக அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அதிமுக எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி,
பாஜக மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து உள்ளது.

முன்பு பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும் பாஜகவை கைவிட்டு விட்டது.
எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடையும்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாஜகவுக்கு எதிராக ஓட்டுப்போட்டு இருப்பார் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: