புதன், 25 ஜூலை, 2018

பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல்!

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்!மின்னம்பலம் : பாகிஸ்தானில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது.
பாகிஸ்தானில் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையில் இன்று (ஜூலை 25) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 272 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதில் 137 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் கட்சி ஆட்சியை அமைக்கும். 10 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பாகிஸ்தானில் யார் வெற்றி பெறுவார்கள் என்று உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. ஒட்டுமொத்தமாக 85,300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் சிறையிலிருக்கும் நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எம்என்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃப்பும், அவரது மகள் மரியமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸின் தம்பி ஷேபாஸ் ஷெரீஃப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்கணிப்புகளும் இதுவரையில் வெளியாகியுள்ளன.
முதல்கட்ட கருத்துக்கணிப்புகள் இம்ரானுக்கு சாதகமான முடிவுகளைக் கூறியிருந்தாலும், அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகள் ஷெரீஃப் கட்சிக்கு முன்னிலை கிடைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும் ஊழல் ஒழிப்பு, சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிரமான பிரச்சாரத்தை இம்ரான் கான் மேற்கொண்டுள்ளார்.

அதேநேரத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ராணுவப் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பாகிஸ்தான் அரசின் மீது அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவைக் கொண்டிருக்கிற உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் மக்களின் இந்த அச்சத்திற்குக் காரணமாகவுள்ளது.
நவாஸ் ஷெரீஃப் வெற்றி பெறுவதை ஐஎஸ்ஐ விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில சர்வதேச அமைப்புகளும் இதே கருத்தை முன்வைத்துள்ளன.
வாக்குச்சாவடிகளில் வன்முறை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் என 3,71,388 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடந்து, தேர்தலில் வெற்றி பெற்றவரே ஆட்சியமைப்பாரா அல்லது ராணுவப் புரட்சி வெடிக்குமா என்று அறிய உலக நாடுகளும் பாகிஸ்தான் தேர்தல் மீது கண் வைத்துள்ளன. தேர்தல் நேரத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது.
மேலும், இன்று நள்ளிரவே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இன்றிரவே யார் புதிய பிரதமர் என்பது தெரியக்கூடும்.
இதனிடையே தமக்கு வாக்களித்து அபார வெற்றி தருமாறு பாகிஸ்தான் மக்களிடம் ராவல்பிண்டி சிறையிலிருக்கும் நவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நாள் எதிரிகளுக்கு முடிவு கட்டும் நாளாக இருக்கட்டும். நாட்டில் நீதி தோற்று விட்டது. நீதியைக் காப்பாற்ற எனது சிங்கம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: