திங்கள், 18 ஜூன், 2018

மாயாவதி : மத்திய பிரதேசத்தில் காங்கிரசோடு பகுஜன் சமாஜ் கூட்டணி இல்லை.

காங்கிரஸுடன் கூட்டணியில்லை: பகுஜன் சமாஜ்!மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.
சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அமைச்சரவையின் பதவிக்காலம் மத்தியப் பிரதேசத்தில் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பகுஜன் சமாஜ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியானது. நேற்று (ஜூன் 18) மத்தியப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் நர்மதா பிரசாத் அகிர்வார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ம.பி.யிலுள்ள 230 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். அதோடு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

“எங்களது வாக்கு வங்கி பங்குகளைப் பெற விரும்புகிறது காங்கிரஸ்; அதனாலேயே, எங்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, எங்களுடன் கூட்டணி அமைத்து எங்களை விட அதிக இடங்களைப் பெற முயல்கிறது. இது பிஎஸ்பி கட்சியினரின் ஊக்கத்தைக் குறைப்பதாக அமைந்துள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு முன் நடந்த 2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 165, காங்கிரஸ் 58, பகுஜன் சமாஜ் 4, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் மூன்று இடங்களைப் பிடித்தன. கடந்த மே மாதம் பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளின் கூட்டணியில் பகுஜன் சமாஜ் இடம்பெறும் என்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் மாயாவதி, தங்கள் கட்சிக்கு மரியாதைக்குரிய அளவில் போதுமான இடங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறியிருந்தார். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், 2019 பொதுத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில், பாஜகவை வீழ்த்துவதற்காக பிஎஸ்பிக்கு கூடுதலாக இடங்கள் தந்து துணை நிற்கவும் தயார் என்று அறிவித்திருந்தார் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்.
இந்த நிலையை வலுப்படுத்தும் பொருட்டு, மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மானக் அகர்வால், ஒரேமாதிரியான கொள்கைகள் கொண்ட கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சிக்கும் என்று மாநில கட்சித் தலைவர் கமல்நாத் ஏற்கனவே கூறியிருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், எந்தக் கட்சியின் பெயரையும் அப்போது அவர் குறிப்பிடவில்லை என்று கூறினார்.
காங்கிரஸ் கூட்டணியை பகுஜன் சமாஜ் மறுத்துள்ள வேளையில், சமாஜ்வாதி கட்சிக்கு மத்தியப் பிரதேசத்தில் செல்வாக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: