செவ்வாய், 19 ஜூன், 2018

பேருந்து இந்தி எழுத்துகள்.. இருவர் மீது நடவடிக்கை!

இந்தி எழுத்துகள்: இருவர் மீது நடவடிக்கை!மின்னம்பலம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பேருந்தின் பெயர் பலகையில் இந்தியில் எழுதிய நடத்துநர் நேற்று (ஜூன் 18) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் 17 என்ற எண் கொண்ட, தமிழக அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தின் நடத்துநராக சீனிவாசன் பணியாற்றி வந்துள்ளார். இவர், பேருந்தின் பெயர் பலகையில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஊர் பேரை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு நடந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இவரின் செயல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை எச்சரிக்கும் விதத்தில் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் காமராஜ் உள்ளிட்டோர் ஈரோட்டில் உள்ள போக்குவரத்துத் துறையின் வணிகப்பிரிவு மேலாளர் மோகனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதை விசாரித்த மோகன், இந்தியில் பெயர்ப் பலகையை எழுதிய நடத்துநர் மற்றும் பேருந்து நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உடனடியாக அந்த நடத்துநரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று ஒருநாள் மட்டும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், கவுந்தப்பாடி - பெருந்துறை சிப்காட் பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பேருந்தில் பயணிப்பதால் அவர்களுக்குப் புரியும் விதத்தில் இந்தியில் பெயர்ப் பலகையை வைத்துள்ளார் என்றும், கவுந்தப்பாடி - பெருந்துறை என்று தமிழில் இருந்த பெயரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாற்றியமைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் காரணத்திற்காக நடத்துநர் இப்படிச் செய்திருந்தாலும், போக்குவரத்துக் கழகம் அளித்த பெயர்ப்பலகையையே உபயோகப்படுத்த வேண்டும். அதுவே விதிமுறை என்று கூறி அவரை பணியிடை நீக்கம் செய்ததாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளும் அழிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை: