சனி, 23 ஜூன், 2018

ஆளுநர் மீது கறுப்பு கொடி வீசிய 192 திமுகவினர் கைது

DMK workers 192 have been detained in Salem Central jail tamiloneindia :சேலம்: ஆளுநர் கார் மீது கறுப்புக்கொடி வீசிய திமுகவினர் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலம்- சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277 கி.மீ., தொலைவிற்கு 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி என்று கிராம மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார்.

அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது ஆளுநர் சென்ற கார் மீது கறுப்புக்கொடி மற்றும் பலூன்களை அவர்கள் வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: