புதன், 21 மார்ச், 2018

CM சந்திரசேகர ராவ் :பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்! தெலுங்கானா முதல்வர் அதிரடி

பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்!மின்னம்பலம்: தெலங்கானாவில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலுங்கை கட்டாயப் பாடமாக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், நேற்று (மார்ச்20) அறிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், “நம் தாய் மொழியையும், கலாச்சாரத்தையும், மதிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.எனவே, தெலுங்கைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். நல்ல கல்வியை பெற ஆங்கில வழி பள்ளிகளில் படிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, மற்ற பாடத்துடன் தெலுங்கைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம்”எனத் தெரிவித்துள்ளார்.

பிரகதி பவனில் துணை முதல்வர், கல்வி அமைச்சர் கடியம் ஸ்ரீஹரி, அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் ராஜீவ் சர்மா போன்ற உயர்மட்ட அதிகாரிகளோடு உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதற்கான சட்டம் மாநில சட்டமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தில் இயற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
2017 செப்டம்பர் மாதம், தெலங்கானாவில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 2017 நவம்பர் மாதம் மாநில அரசு, தெலுங்கை கட்டாயமாக்க துணை குழு அறிக்கையைப் பெற்றது.
தமிழ்நாடு மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய் மொழி கொள்கைகளைப் படித்த பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தாய் மொழி கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு தேசபக்தி மற்றும் ஒழுக்க நெறிகளைக் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். தெலுங்கு மொழியை பாடமாகப் படிக்கும் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தெலுங்கு பண்டிட்டை நியமனம் செய்ய வேண்டும் என்றும், கல்வித் துறைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தெலுங்கு மொழியை நிர்வாக மொழியாகவும், அரசாங்க வேலைகளைப் பெற மக்கள் கட்டாயம் தெலுங்கு படித்திருக்க வேண்டும் என்னும் நிலையை உருவாக்க துணை முதல்வர் வெங்கையா நாயுடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசை அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை: