திங்கள், 19 மார்ச், 2018

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்தது

தினத்தந்தி :பெங்களூரு, லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்ததுகர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, இப்போதே பிரசார கூட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற முன்நகர்வில் காங்கிரசும், ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதீய ஜனதாவும் கடும் போட்டியில் குதித்து உள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சில விவகாரங்களை மக்களை கவரும் விதமாக உணர்வுப்பூர்மான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதில் முதல் நகர்வாக கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிவிக்கப்பட்டு, மத்திய அரசிடமும் ஒப்புதல் கோரி உள்ளது. > இப்போது கர்நாடக அரசியலில் மிகவும் முக்கியமான விவகாரமாக இருந்து வரும் லிங்காயத் விவகாரத்தில் முக்கிய நகர்வை காங்கிரஸ் அரசு எடுத்து உள்ளது. லிங்காயத், வீரசைவ சமூகத்திற்கு தனி மத அடையாளம் தேவை என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. புத்த, சீக்கிய மதங்களை போல் லிங்காயத், வீரசைவ சமூகம் உலக அளவில் ஒரு மதமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் யாரும் இதில் தலையிடக்கூடாது எனவும் அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது மேலும் வலுத்தது. இப்போது லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்து உள்ளது. மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக கோவில்களுக்கு பயணம் செய்தார். இதே 'மென்மையான இந்துத்துவா' பாணி அரசியலை கர்நாடகாவில் கையிலெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவில்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளார். கர்நாடகாவில் செல்வாக்கு பெற்ற லிங்காயத் மக்களை கவரும் வகையில் நகர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான தனி மதம் கோரிக்கைக்கு காங்கிரஸ் அரசு அங்கீகாரம் அளித்து உள்ளது.

லிங்காயத் சமூக மக்கள் பாஜகவுக்கு அதிகமாக வாக்களித்து வரும் நிலையில், லிங்காயத் சமூக மக்களை ஈர்க்கும் வகையில் முதல்வர் சித்தராமையா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இப்போது அவர்களுடைய முக்கிய கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: