செவ்வாய், 20 மார்ச், 2018

சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது! கணவர் நடராஜன் இறுதி சடங்கு-...

Mathi - Oneindia Tamil சென்னை: உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பரோல் வழங்கியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. 
கடந்த ஆண்டு நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பரோலில் வந்திருந்தார் சசிகலா. 
சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார் சசிகலா. கடந்த 16-ந் தேதி நடராஜன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சசிகலா பரோலில் வருவார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை நடராஜன் உயிர் பிரிந்தது. இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும். பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும். விளாரில் நடைபெறும் இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார். இதற்காக நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பரோல் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: