புதன், 21 மார்ச், 2018

என்னைப் புகழ வேண்டாம்: ஸ்டாலின்

என்னைப் புகழ வேண்டாம்: ஸ்டாலின்மின்னம்பலம்: அவையில் தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் அவையில், முதலில் ஜெயலலிதாவை வானளவில் புகழ்ந்துவிட்டுதான், தன்னுடைய பதிலையோ அல்லது தனது தொகுதிக்கான கோரிக்கையையோ முன்வைப்பார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் பல்வேறு முறை வெளிநடப்பும் செய்துள்ளன. ஆனால் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது மட்டும் நிறுத்தப்படவில்லை. இதனால் அமைச்சர் பதவி பெற்றவர்களும் உண்டு.

இந்நிலையில் இன்று (மார்ச் 21) சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "பட்ஜெட் விவாதமாக இருந்தாலும், கேள்வி நேரமாக இருந்தாலும், கவன ஈர்ப்புத் தீர்மானமாக இருந்தாலும், சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது, தாங்கள் எழுப்புகின்ற பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர், " தேவையில்லாமல், எங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், பெருமை சேர்க்க வேண்டும் என்று, நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதுபோல, புகழ்ந்து பேசுவதால் அவையின் நேரம் வீணாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டாம். எனவே மக்கள் பிரச்னைகளை மட்டும் பேசினால் போதும்" என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: