புதன், 21 மார்ச், 2018

நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே அடக்கம்

நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே அடக்கம்மாலைமலர் : சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது. தஞ்சாவூர்: புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 அஞ்சலிக்குப் பிறகு நடராஜன் உடல் தஞ்சாவூருக்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட நடராஜன் உடலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக சிறையில் இருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்து, நடராஜன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.& அஞ்சலி முடிந்ததும் இன்று மாலை 4 மணியளவில் தஞ்சையில் உள்ள வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நடராஜன் உடல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதும் நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: