ஞாயிறு, 18 மார்ச், 2018

கொள்ளை அடித்து ஸ்ரீ ரங்கம் கட்டிய கிரிமினல் ஆழ்வார்கள் .. புத்தரின் தங்க சிலையை களவாடி ..... பிரைமரி எவிடென்ஸ் !

வினவு : ழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலகமகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத்தருகிறோம்.
பிரபந்த வித்வான் எதிராஜ ராமானுஜ தாசர் எனும் வைணவப் பார்ப்பனரால் தொகுக்கப்பட்டு, ஆழ்வார்கள் அமுத நிலையம், சென்னை – 2 -ஆல் வெளியிடப்பட்டுள்ள குருபரம்பரை வைபவம் (பதிப்பு : 1992) எனும் நூலிலிருந்தும், ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் (பதிப்பு : 1927) (வெளியீடு :  திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்தில் சே.கிருஷ்ணமாச்சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) என்ற நூலிலிருந்தும் இது தொகுக்கப்பட்டுள்ளது.
பார்ப்பன மதத்தின் கிரிமினல்தன்மையை அம்பலப்படுத்தும் விதத்தில் புதிய கலாச்சாரம் மே-1993 இதழில் இக்கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.
குருபரம்பரா ப்ரபாவம் என்பதன் பொருள் ஆழ்வார் பரம்பரையின் சாதனைகள் என்பதாகும். கொலை, கொள்ளை மற்றும் 420 வேலைகளைச் செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.
சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மணிப்பிரவாள நடையில் இவை எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்குப் புரியாது என்பதால், இவற்றைத் தமிழ்ப்படுத்தி அளிக்கிறோம்.

* * *

ரங்கநாதனுக்கு விமானம், கோபுரம், மதிற்சுவர்கள் கட்ட வேண்டுமென்று விரும்பிய திருமங்கையாழ்வார், தன் தொண்டர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறி, “இந்த ஆலயத் திருப்பணி செய்ய பணத்திற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினார். “நாகப்பட்டினத்தில் புலையர் மதத்தின் புத்தர் சிலையொன்று உள்ளது; முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலையைக் கொண்டுவந்து சிதைத்துத் (அதை விற்றுக் கிடைக்கும் பொருளை) திருப்பணிக்குப் பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை கூறினர்.
(சான்றுக்கு சில வரிகள் மணிப்பிரவாள நடையில்: பெரிய பெருமாளுக்கும் திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளர்க்கும் விமாந மண்டப கோபுர ப்ராஸாத ப்ராகாராதி ரூபமான கைங்கர்யங்கள் செய்தருளவேணுமென்று திருவுள்ளமாய், அதுக்குத் தம்முடைய பரிஜனங்களையழைத்து நம்பெருமாளுக்குத் திருமதிள் முதலான கைங்கர்யம் ப்ணுகைக்குத் தனார்ஜநஞ்செய்யும் வருஏன் என்று கேட்டருள, அவர்களும் நாகப்பட்டணத்திலே புலையறமாயிருப்பதொரு புத்த ப்ரதிமை ஹிரண்ய ஸ்வரூபமாயிருக்கும். அத்தைக் கொண்டுவந்து சிந்நாபிந்நமாக்கி அறுப்பதே கருமங்கண்டாய் என்று விண்ணப்பஞ்செய்ய, ஆழ்வாரும் ஸம்மதித்து நாகபட்டணத்திலே போய்..)
அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு திருமங்கையாழ்வார் நாகை சென்று, அந்நகரிலிருந்த வைணவப் பெண் ஒருத்தியைச் சந்தித்து, இந்தச் சிலை இரகசியம் குறித்து வினவினார். இந்த ஊரிலுள்ள புத்த விகாரையின் உள்ளே தங்கத்தினாலான புத்தச் சிலை ஒன்று உள்ளது என்றும், அந்தச் சிலையையும், விமானத்தையும் (மண்டபத்தையும்) உருவாக்கிய சிற்பி கடல் கடந்த தீவு ஒன்றில் இருக்கிறான் என்றும் என்னுடைய மாமியார் கூறுவதுண்டு” என்று அந்தப் பெண் கூறினாள்.
இதைக் கேட்ட திருமங்கையாழ்வார், “நல்ல காரியத்தில் தாமதம் கூடாது” என்று சொல்லி, தனது தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு மேற்படி தீவிற்குச் சென்றார். அந்தச் சிற்பியின் வீட்டை விசாரித்து அறிந்து அவன் வீட்டருகில் நின்று தனது தொண்டர்களுடன் கீழ்க்கண்டவாறு புலம்பத் தொடங்கினார். “நாகப்பட்டினம் பவுத்தக் கோயிலையும், விமானத்தையும் உடைத்து உள்ளே இருந்த தங்க விக்கிரகத்தை ஒரு துலுக்கர்கள் கூட்டம் கொண்டு போய்விட்டது; இந்த அநீதியைக் கண்ணால் கண்டபின்னரும் நம் உயிர் பிரியவில்லையே!” வெளியிலிருந்து வீடு திரும்பிய அந்தச் சிற்பி (இந்த புலம்பலை உண்மையென நம்பி) திருமங்கையாழ்வாரிடமே வந்து விவரம் கேட்டான்.
உடனே திருமங்கையாழ்வாரும் அவரது தொண்டர்களும் புத்தர் சிலையைத் துலுக்கர்கள் திருடிச் சென்ற கதையை விலாவாரியாகக் கூறினர். இதைக் கேட்ட சிற்பி, “பீடத்திலிருந்து சிலையை அகற்ற முடியாதவாறு அதனைச் சங்கிலி கொண்டு பிணைத்து, அபிசேக நீர் வெளியேறும் நீர்த்தாரையின் கீழ் கல்லுக்குள் ஒரு இரும்பு ஆணியில் அந்தச் சங்கிலியின் மறுமுனையைக் கட்டியிருந்தேன். இந்த இரகசியத்தை என்னுடனிருந்த துரோகி எவனோ திருடர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டானே” என்று கூறி விழுந்து கதறியழத் தொடங்கினான்.
இவ்வாறு சிலையமைப்பின் இரகசியத்தை அறிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் உடனே கடற்கரை நோக்கிச் சென்றனர். கடற்கரையில் தருமவானான ஒரு பாக்குக் கப்பல் வியாபாரியைக் கண்டு அவனுக்கு ஆசி கூறிய ஆழ்வார், தானும் தனது தொண்டர்களும் விரதமிருந்து வருவதாகவும் தங்களை நாகப்பட்டினத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவனிடம் கோரினார். வியாபாரியும் மகிழ்வுடன் அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான்.
கப்பல் போய்க்கொண்டிருக்கும்போது, அக்கப்பலிலிருந்து ஒரேயொரு கொட்டைப் பாக்கை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்தார் திருமங்கையாழ்வார். அதில் ஒரு பாதியை அவ்வணிகனிடம் கொடுத்து மறுபாதியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தப் பாதிப்பாக்கு எனக்குத் தேவைப்படுகிறது, எனவே ‘பாதிப்பாக்கு எனக்குத் தருவதாக’ ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். வணிகனும் அவ்வாறே எழுதிக் கொடுத்தான்.
அந்தச் சீட்டை வாங்கிக்கொண்ட ஆழ்வார் கப்பல் கரை சேர்ந்தவுடனே கப்பலிலிருந்த பாக்கில் பாதியை எண்ணித்தருமாறு வணிகனிடம் கேட்டார். அதிர்ச்சியடைந்த வணிகன் கப்பலில் ஆழ்வார் வெட்டிவீசிய பாதிப்பாக்கைத் தேடிக் கண்டுபிடித்து, “இந்தா உன்னுடைய பாதிப் பாக்கு” என்று திருப்பித் தந்தான். “இந்த அரைப்பாக்கையா நான் கொடுத்தேன்? நீ எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி உன் சகவணிகர்களிடமே நியாயம் கேட்போம்” என்று ஆழ்வார் கூற, வணிகனும் சம்மதித்தான்.
வணிகர்கள் ஆழ்வாருக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்ல, வேறு வழியில்லாமல் (கப்பலில்) பாதிப்பாக்குக்கான தொகையை ஆழ்வாரிடம் கொடுத்து அனுப்பினான் வணிகன்.
இப்படியாக அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு புத்த விகாரைக்கு வந்து சேர்ந்த ஆழ்வாரும் அவர்தம் தொண்டர்களும் அங்கே ஒளிந்திருந்து, நள்ளிரவில் அந்த தங்க விக்கிரகத்தைத் திருடி, அதைச் சிதைத்து எடுத்துச் சென்றனர்.
சிலையைக் கொண்டு போகும்போது விடிந்து விடவே, ஒரு உழுத வயலில் சிலையைப் புதைத்து வைத்துவிட்டு அருகே காவல் நின்றார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரன் நாற்றுக் கட்டுடன் நடவு செய்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான். அவனை மறித்து, “இது என் பாட்டன் தேடின நிலம்” என்று ஆழ்வார் கூறவே, விவாதம் முற்றியது. “நாளை விடிவதற்குள் பத்திரம் கொண்டுவருகிறேன்; இல்லையேல், நீ உழுது கொள்” என்று ஆழ்வார் கூற, அவனும் சம்மதித்துத் திரும்பினான்.
இரவு வரை காத்திருந்து சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பி ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.
சிலை திருட்டுப் போனதையறிந்து நாகை நகரத் தலையாரியும், மணியக்காரரும் விகாரையை நன்றாகச் சோதித்து, பிறகு சிலை திருடர்கள் போன வழியறிந்து உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர். “சிலை எங்கே?” என்று திருமங்கையாழ்வாரிடம் அவர்கள் கேட்க, ஆழ்வார், “எனக்குத் தெரியாது” என்றார். “அப்படியானால் உமக்குத் தெரியாதென்று சத்தியம் செய்வீரா?” என்று அவர்கள் கேட்டவுடனே, மேலை வருஷம் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று உங்கள் விக்கிரகத்தின் சுண்டுவிரல் குறையாமல் திருப்பித் தருகிறேன்.” என்று அவர்களுக்கு ஆழ்வார் சீட்டெழுதிக் கொடுத்தார்.
அதன்பின் விக்கிரகத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருளில் கோயில் திருப்பணி தொடங்கி நடத்தினர். கோயில் மதில் சுவர் கட்டும்போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் (பார்ப்பனர்) நந்தவனம் குறுக்கே வர, அதைத் தவிர்த்து மதிலைக் கட்டுவித்தார். இதனால் தொண்டரடிப் பொடியாழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவில் நாகையிலிருந்து சிலையைப் பறிகொடுத்தவர்கள் வந்தனர். ஆழ்வார் எழுதிக் கொடுத்த சீட்டைக் காண்பித்து சிலையைத் திருப்பிக் கேட்டனர். ஆழ்வார் சிலையின் சுண்டு விரலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். நியாயம் சொல்பவர்களும், “சீட்டுப்படி சிறுவிரலைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று தீர்ப்புக் கூற, சிலைக்கு உரியவர்கள் இந்த சிறுவிரலும் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
அடுத்து, கோயில் கட்டிய கொத்தனார்களும் சித்தாட்களும் கூலி கேட்டனர். “காவிரிக்கு அந்தப்புறம் ஒரு தீவில் வேண்டிய அளவு பொன்னும் பொருளும் உள்ளன. அங்கு வந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, அவர்களையெல்லாம் ஓடத்திலேற்றி அழைத்துப்போனார் திருமங்கையாழ்வார். நட்டாற்றில் வைத்து ஓடக்காரனுக்கு ஆழ்வார் ஜாடை காட்ட, அவன் இன்னொரு ஓடத்தில் ஆழ்வாரை ஏற்றிக் கொண்டு, அந்தத் தொழிலாளிகள் இருந்த ஓடத்தைக் கவிழ்த்துவிட்டான்.
ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார். அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.
பிறகு ஆழ்வாரின் கனவில் தோன்றிய அரங்கன், “ஏன் கலங்குகிறாய்? அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழைக்கச் சொல்” என்றான்.
ஆழ்வாரும் அவ்வாறே அவர்களை அரங்கனின் சந்நதியில் கொண்டுவந்து நிறுத்த, அவர்களும் தத்தம் பெற்றோரின் பெயர் சொல்லி அழைத்தார்கள். பிதுருக்களாக மாறியிருந்த (அதாவது செத்துப்போன) அவர்களது பெற்றோர்கள் பெருமானின் பின்புறமிருந்து தத்தம் பிள்ளைகளிடம் கீழ்வருமாறு கூறினார்கள். “ஆழ்வாரின் திருவருளால் நாங்கள் அரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டோம். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

* * *

வ்வளவு நயவஞ்சகமான, கீழ்த்தரமான, கொடூரமான கிரிமினலைத்தான் ஆழ்வார் என்று கொண்டாடுகிறார்கள். இன்று ஆர்.எஸ்.எஸ். எத்தகைய கிரிமினல் வேலைகளையெல்லாம் செய்கிறதோ, அவை அத்தனையும் அன்றே செய்து காட்டியிருக்கிறார் திருமங்கையாழ்வார்.
ஆண்டாள் பற்றி எழுதியதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா என்று கேட்பவர்கள், இந்த எவிடென்ஸுக்கு என்ன பதில் சொல்வார்கள்? ஆண்டாள் பாசுரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றின் மகத்தான படைப்புவெளியையும் கவிதைப்பரப்பையும் கொண்டாடி மெய்சிலிர்ப்பவர்கள், இந்த குருபரம்பரா ப்ரபாவத்துக்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?
புத்தர் சிலையைத் திருடியதும், வியாபாரியைச் சூது செய்து ஏமாற்றியதும், கோயிலைக் கட்டிய தொழிலாளியை கொன்றதும் திருமங்கையாழ்வாரின் படைப்புவெளியா? இந்த அயோக்கியத்தனங்களுக்கும் ஆழ்ந்த ஆன்மீக அர்த்தங்கள் உண்டா? வைரமுத்துவை எச்.ராஜா கேட்டது போல, அவாளைத் திருப்பிக் கேட்பதாயின், எத்தகைய மொழியில் திருப்பிக் கேட்க வேண்டும்?
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

1 கருத்து:

Unknown சொன்னது…

உண்மையில் சோழமன்னன் காட்டியது என்றும் ஆதாரமாக சொல்லிறார்கள் அதற்க்கு இதற்க்கு ஆதாரமாக ஒரு விதிக்கு தெருவுக்கு சோழமண்ணில்வ் பெயர் உள்ளது என்று சொல்லுகிறார்கள் இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்