ஞாயிறு, 18 மார்ச், 2018

நாஞ்சில் சம்பத் ஸ்டாலின் முதல்வராவார்

ஸ்டாலின் முதல்வராவார்: நாஞ்சில் சம்பத்தற்போது தேர்தல் வந்தால் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராவார் என்று தினகரன் அணியிலிருந்து விலகியுள்ள நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் தனிக்கட்சியை தினகரன் ஆரம்பித்த நிலையில் கட்சியில் அண்ணா, திராவிடம் உள்ளிட்ட பெயர்கள் இல்லை என்று கூறி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். மேலும் அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும், இனி இலக்கிய மேடைகளில் தன்னைப் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) தனது ட்விட்டர் பக்கத்தில் நாஞ்சில் சம்பத், "இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் தினகரனுக்கு துணை நின்றேன். தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழிவாங்கப்பட்ட போது பக்கபலமாகவும், தக்க துணையாகவும் இருக்கத் தீர்மானித்தேன். அவரைச் சிகரத்துக்குக் கொண்டு செல்ல என் சிறகுகளை அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்குக் கீழ் சிக்கிய புழுவைப் பார்ப்பதுபோல்தான் என்னைப் பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை.
அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் திமுக ஆட்சியில் அமரும். அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். இவ்வாறு கூறுவதால், நான் திமுகவில் சேர்ந்து விட்டதாக அர்த்தமில்லை. நான் தினகரனை முதல்வர் ஆக்க பாடுபட்டேன். ஆனால், இனி அவர் முதல்வர் ஆக மாட்டார்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: