வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

ஜி டி நாயுடு கூறியதை பேரறிஞர் அண்ணா கூறியதாக ... ... கமல் ..பாரதிராஜா

அறிஞர் அண்ணா என்ன சொன்னார் பாரதிராஜா!மின்னம்பலம் - சிவா​: ஒரு நண்பராக கமல்ஹாசனின் அரசியல் அத்தியாயத்துக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்து, சில போதனைகளைச் சொல்ல பாரதிராஜா முயற்சித்ததில் இவ்வளவு பெரிய பிழை நேர்ந்திருக்கக் கூடாதுதான். ஆனால், சிறு தவறு எத்தனை பெரிய வரலாற்றுப் புரட்டை ஏற்படுத்தும் என்றுணர்ந்த பாரதிராஜா போன்ற படைப்பாளி அறிஞர் அண்ணாவின் கூற்றை மாற்றுவது அவருக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொடுக்கும்.
என் இனிய நண்பர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு... அன்புடன் பாரதிராஜா எழுதுகிறேன் என்று கடிதத்தைத் தொடங்கினாலும், நான்காவது பத்தியில், கமல் பற்றிய புகழை அழுத்தம் கொடுத்துச் சொல்வதாக இந்தக் கடிதம் மாறிவிடுகிறது. எனவே, இந்தக் கடிதம் கமலுக்காக எழுதப்பட்டது
என்பதைவிடவும், அதைப்படிக்கும் மக்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். அதுகூடப் பிரச்னை இல்லை. அறிஞர் அண்ணாவை மேற்கோள் காட்டியதில்தான் சிக்கல்.

“என் திரைப்படங்களை சென்சார் செய்யாமல் திரையிட அனுமதித்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியமைக்கிறேன் என்றாராம், அறிஞர் அண்ணா” எனக் குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா. இங்கேதான் வரலாறு புரட்டப்பட்டிருக்கிறது.
அறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடிக்க மட்டுமே நினைத்திருந்தால் அதற்கு எத்தனையோ வழிகள் இருந்தன என்பதைத் தமிழக வரலாறு கண்ட மக்கள் அறிவர். திராவிடக் கொள்கைகளை வீதியெங்கும் ஒலிக்கவிட வேண்டும் என்றே சினிமா என்ற ஊடகத்தை அண்ணா கையிலெடுத்தார். சென்சார் இல்லாத திரைப்படத்தின் மூலம் திராவிட நாட்டைப் பெற்றுத் தருவேன் என்றுதான் அண்ணா கூறியிருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று அண்ணா சொன்னதாக பாரதிராஜா குறிப்பிட்டிருப்பது, திரை ஊடகத்தின் தாக்கம் தென்னிந்தியப் பகுதியையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்ற வலிமையான கருத்தை மறைப்பதாகவே இருக்கிறது.
அறிஞர் அண்ணாவின் பேச்சினாலும், எழுத்தினாலும் தன்னை திராவிட இயக்கத்தில் தீவிரமாக இணைத்துக்கொண்டவரும், தமிழக அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவருமான என்.வி.கலைமணி, தான் எழுதிய‘தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு’ என்கிற புத்தகத்தில் அண்ணாவின் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். தன் திரைப்படங்களை சென்சார் செய்வதைப் பற்றி அண்ணா கூறியதைக் குறிப்பிட்டிருக்கிறார். “நான்கு திரைப்படங்களை சென்சார் செய்ய மாட்டேன் என்று மத்திய அரசும் மாநில அரசும், எனக்கு வாக்களிக்குமானால், நான் நிச்சயமாகத் திராவிட நாட்டைப் பெற்றுத் தருவேன்” என்று அண்ணா கூறியிருக்கிறார்.

தெரிந்தோ தெரியாமலோ பாரதிராஜா செய்த இந்தத் தவறு இன்று மறுக்கப்படவில்லையென்றால், நாளை வரப்போகும் டிஜிட்டல் இளைஞர்களுக்கு ‘அண்ணா ஆட்சியைப் பிடிக்க திரைப்படங்களைப் பயன்படுத்தினார்’ என்ற தவறான அறிவு புகுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, திராவிடன் வார ஏடு, முரசொலி, மாலைமணி, எரியீட்டி, சவுக்கடி, தனியரசு, போர்வாள், தமிழர் நாடு உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளரான என்.வி.கலைமணி அண்ணாவின் கூற்றைப் பதிவு செய்திருப்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும் அல்லவா?

கருத்துகள் இல்லை: