சனி, 24 பிப்ரவரி, 2018

ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்... செயலிழந்த Aircell செல்போன் இணைப்புகள்



tamilthehindu :கோவை அண்ணா சிலை அருகேயுள்ள ஏர்செல் நிறுவன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்.   –  படம்: ஜெ.மனோகரன்

ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் இணைப்புகள் செயல் இழந்ததால், ஏராளமான வாடிக்கையாளர்கள் கோவை, திருப்பூரில் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் தொடங்கின. கடந்த 2 நாட்களாக பல பகுதிகளில் ஏர்செல் சேவை முற்றிலுமாக முடங்கியது.
இதேபோல, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலும் ஏர்செல் சேவை கடந்த 2 நாட்களாக முடங்கியது. பல பகுதிகளிலும் ஏர்செல் இணைப்புகள் செயலிழந்ததால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
கோவை அண்ணா சிலை அருகேயுள்ள ஏர்செல் அலுவலகத்தில் நேற்று காலை முதலே ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு, தங்களது ஏர்செல் இணைப்பை துண்டித்து, அதே எண்ணைக் கொண்டு வேறு நிறுவன இணைப்பைப் பெற முயற்சித்தனர். மேலும், ஏர்செல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது குறித்து சரமாரியாகப் புகார்களைத் தெரிவித்தனர்.
பிற்பகலுக்குமேல் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல வாடிக்கையாளர்கள் ஏர்செல் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது, ‘கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் சரிவர வேலை செய்யவில்லை. ஊழியர்களிடம் முறையிட்டபோது, விரைவில் சரியாகிவிடும் என்றனர். நேற்று முன்தினம் முதல் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கிவிட்டது. ஏர்செல் இணைப்பு வைத்திருப்பவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டதால், பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அன்றாடப் பணிகளை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. கோவை போன்ற தொழில் நகரங்கள், பல்வேறு விஷயங்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையையே நம்பியுள்ளதால், தொழில், வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும் ஏர்செல் இணைப்பைத் துண்டித்துவிட்டு, வேறு நிறுவனத்தின் இணைப்பைப் பெற முயற்சிக்கின்றனர். அதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், வாடிக்கையாளர்கள் பரிதவித்துப் போயுள்ளனர்’ என்றனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஏர்செல் அலுவலகங்கள், முகவர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டன.
இதுகுறித்து ஏர்செல் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டபோது, ‘டவர் பிரச்சினை காரணமாக செல்போன் இணைப்புகள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது உண்மைதான். எனினும், விரைவில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். வேறு நிறுவனத்துக்கு மாறுகிறோம் என்று கூறும் வாடிக்கையாளர்களை, நாங்கள் தடுக்கவில்லை. அவர்களது எண்ணை துண்டித்து, வேறு நிறுவனத்துக்கு மாற உதவுகிறோம். எனினும், ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டுள்ளதால், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன’ என்றனர்

கருத்துகள் இல்லை: