புதன், 21 பிப்ரவரி, 2018

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நான் தூங்கிவிட்டேன்: விசாரணை ஆணையத்தில் சமையல்கார அம்மா

tamiloneindia : ஜெயலலிதா மறைவு குறித்து நடைபெறும் விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராக வந்த ஜெயலலிதாவுக்கு சமையல் செய்த ராஜம்மாள். செப்டம்பர் 22-ம் தேதி, போயஸ் கார்டன் வீட்டிலிருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நான் தூங்கிவிட்டேன் என்று விசாரணை ஆணையத்தில் சமையல்கார பெண்மணி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிய 31 பேரின் பட்டியலை விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்தவர் ராஜம்மாள். சுமார் 34 ஆண்டுகள் அவர் போயஸ் கார்டனில் வேலை பார்த்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ராஜம்மாள் அவரை நேரில் சென்று பார்த்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் போயஸ் கார்டன் வீட்டில் சமையல் வேலையை ராஜம்மாள் செய்து வருகிறார்.
நேற்று விசாரணை ஆணையத்தில் ராஜம்மாள் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ராஜம்மாளுடன் வந்தவர்கள் அவரை நிருபர்களுடன் பேச விடாமல் அழைத்துச் சென்றனர். “2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அழைத்து சென்றபோது, நான் தூங்கி விட்டேன்.
மறுநாள்தான் எனக்கு விவரம் தெரியும். 23-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்த்தேன்” என்று விசாரணை ஆணையத்தில் ராஜம்மாள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் இன்றும், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் நாளையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது

கருத்துகள் இல்லை: