வியாழன், 22 பிப்ரவரி, 2018

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்.. பிரதமரை நேரில் சந்திக்க முடிவு ,,

பிரதமரைச் சந்திக்க முடிவு!மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது உள்பட 3 தீர்மானங்கள் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்ரவரி 22) காலை 10.30 மணியளவில் தொடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சனையில் அரசின் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது என்று தமிழிசையும் தெரிவித்திருந்தனர். மேலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலாக, மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.

உணவு இடைவேளைக்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "காவிரி நதிநீர் போன்ற முக்கியமான பிரச்சனையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒத்த கருத்துடன் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்குப் பாடுபட வேண்டும்" என்று குறிப்பிட்டார். "காவிரி நதிநீர்ப் பிரச்சனை, காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்துள்ளது” என்று குறிப்பிட்ட அவர், காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாதக பாதகங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் ஆக்கபூர்வமான கருத்துகளைச் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆலோசனை மதியம் தாண்டியும் நீடித்த நிலையில், இடையில் அரசின் சார்பில் மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களுடன் அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் உணவருந்தினர். இடையில் தலைமைச் செயலக வளாகத்திலிருந்து காரில் செல்ல முற்பட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நான்கு விவசாயிகள் முற்றுகையிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியவில் மீண்டும் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய வைகோ, "காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும். கர்நாடகா புதிய அணைகளைக் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது எனப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்" என்று பேசினார். அதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களைச் சார்ந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:
1. தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டி வலியுறுத்தப்படும்.
2. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரைக் குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்தரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்
இவ்வாறு தீர்மானங்கள் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை: