வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

ஆந்திர சிறைகளில் அப்பாவி தமிழர்கள் .. தலைகீழாக கட்டி அடிப்பது ,, நகங்களை புடுங்குவது .. மின்சார அதிர்ச்சி கொடுப்பது

மின்னம்பலம் :தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், ஆந்திர மாநிலச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்கத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (பிப்ரவரி 22) அவர் விடுத்த அறிக்கையில், ‘ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்த மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்களுக்குச் செம்மரக் கடத்தலில் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியிருக்கலாம்; கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே அம்மாநிலக் காவல் துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்பதால் அவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாமல் தடுத்து வருகின்றனர்’ என்று ஆந்திரக் காவல் துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.
‘இதனால் பல தமிழர்கள் எந்தவித விசாரணையும் இல்லாமல் மூன்றாண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ள அவர், ‘தமிழர்கள் மீதான வழக்குகளை நடத்துவதோ, அவர்களுக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதோ ஆந்திரக் காவல் துறையின் நோக்கமாகத் தெரியவில்லை. மாறாக, அவர்கள் மீதான வழக்குகளை நடத்தாமல், தொடர்ந்து சிறைகளிலேயே அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதுதான் ஆந்திராவின் நோக்கமாகத் தோன்றுகிறது’ என வேதனை தெரிவித்துள்ளார்.
சிறைக் கொட்டடிகளில் அவர்களைத் தலைகீழாக கட்டி வைத்து அடிப்பது, நகங்களைப் பிடுங்குதல், துப்பாக்கி முனையில் மிரட்டுதல், மின்சார அதிர்ச்சி அளித்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்று ஆந்திர மாநிலத்தின் கடப்பா, திருப்பதி, நெல்லூர் சிறைகளில் வாடும் தமிழர்களை சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவினர் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், ‘கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்குப் பிணை வழங்கி நீதிமன்றங்கள் ஆணையிட்ட பிறகும், அவர்களை வேறு வழக்கில் கைது செய்து தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இதைத் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது’ என்று கண்டித்துள்ளார்.
மேலும், ‘கடந்த 2015ஆம் ஆண்டில் ஆந்திர வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாகத் தமிழக அரசால் சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2016ஆம் ஆண்டு 287 தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் சிலர் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவர் மீதும் சராசரியாக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு வழக்கில் பிணை வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆவதால் அனைத்து வழக்குகளிலும் பிணை வாங்கி விடுதலையாவது சாத்தியமல்ல என்ற விரக்தி நிலைக்குச் சென்று விட்ட தொழிலாளர்கள் விடுதலை என்பதை மறந்து விட்டு, கொடுமைகளுக்குப் பழகி விட்டனர்.
அவர்களை மீட்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தியோ, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோ அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இச்சிக்கலை மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: