வெள்ளி, 12 ஜனவரி, 2018

குட்கா ஜெயக்கொடி இடமாற்றம் .. ..உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு

குட்கா விவகாரம்: திமுக வழக்கு!
மின்னம்பலம் :குட்கா ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்துவந்த தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத் தலைவராக இருந்த ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ஜெயக்கொடி. குட்கா ஊழல் தொடர்பான வழக்கையும் இவர்தான் விசாரித்து வந்தார். குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேர்மையான விசாரணை என நீதிபதியால் பாராட்டப்பட்டவர். இந்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக மோகன் பியார் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு கடந்த புதனன்று அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் சட்டப் பேரவையிலேயே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராமானுஜம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையைத் திசை திருப்பும் முயற்சி இது என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று (ஜனவரி 11) வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டப்பிரிவு செயலாளரான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயக்கொடி மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ள பாரதி, புதிய ஆணையரான மோகன் பியாரின் நியமனத்தை ரத்து செய்யுமாறு தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: