வெள்ளி, 12 ஜனவரி, 2018

பொங்கல் .. சென்னை சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயங்க தொடங்கின

தினத்தந்தி :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்தபடி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்தபடி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.
 தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் மாநிலம் முழுவதும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன
போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையம் வெறிச்சோடி இருந்ததால் சிறப்பு பஸ் இயக்கப்படாமல் போய்விடுமோ? என்று பயணிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


கடந்த சில நாட்களை காட்டிலும் நேற்று சற்று அதிகமாக அரசு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. ‘ஆன்லைன்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் டிக்கெட் கிடைக்குமா? எனும் ஏக்கத்தோடு வந்தவர்களும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அவர்களை அங்குள்ள அதிகாரிகள் பஸ்களில் ஏற்றி அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளன. எந்த நடைமேடையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் செல்லும் என ராட்சத பலகை மூலம் தெரியப்படுத்தப்பட்டன. மேலும் சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரிக்கப்பட்டு இருந்தன. இதனால் நேற்று வழக்கத்தை விட பயணிகள் சிரமம் ஓரளவு குறைந்தது.

ஏற்கனவே அறிவித்தபடி சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய 5 சிறப்பு இடங்களில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயங்க தொடங்கின. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவதுபோலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக பூந்தமல்லியில் இருந்து தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு இங்கிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

பஸ்கள் எந்த பகுதிக்கு செல்கிறது என்பதை பயணிகள் தெளிவாக தெரிந்து கொள்ள அந்த ஊர்களின் பெயர்கள் பஸ்களின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகளும், ஊழியர்களும் பயணிகளுக்கு வழிகாட்டி அவர்களை பஸ்களில் ஏற்றி விடுகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: