ஞாயிறு, 7 ஜனவரி, 2018

கனிமொழி : 2ஜி வழக்கு நோக்கம் .இனி எப்போதும் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது..இதோடு அழித்துவிட வேண்டும்”

ஜோ. ஸ்டாலின் படங்கள்: கே.ராஜசேகரன்
வாழ்த்துகளும் பூங்கொத்துகளும் குவிந்து கொண்டேயிருக்க, கனிமொழியின் முகம் முழுக்க  சந்தோஷச்சாரல்கள்.
`நீண்டகாலம் நடைபெற்ற வழக்கு. சிறைக்கும் சென்றுவந்தவர் நீங்கள். இப்போது வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?’’ ‘`ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்.   வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அவ்ளோ உற்சாகமாயிருக்கு. மனசு, உடம்பெல்லாம் லேசான மாதிரியிருக்கு. ரொம்ப நிம்மதியா இருக்கேன்.’``2ஜி வழக்கில் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? தீர்ப்புநாள் அன்று எப்படி உணர்ந்தீர்கள்?’’ `‘தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் மட்டும்தான் அன்று என்னிடம் இருந்தது. எனக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என்பதற்காக, ‘நிச்சயமாக சாதகமான தீர்ப்புதான் வரும்... இந்த வழக்கில் ஒன்றுமே இல்லை’ என்று பலர் சொன்னாலும்கூட, நான் நேரடியாக வழக்கைச் சந்தித்து, விசாரணைகளை அணுகி, வாதங்களை முன்னெடுத்த அனுபவத்தில், எப்போதோ இந்த வழக்கு நீர்த்துப் போய்விட்டது என்பதையும் உணர்ந்திருந்தேன். ஆனால், அதையும்தாண்டி, ‘நியாயம் கிடைக்கும்; நிச்சயமாக விடுதலை செய்யப்படுவோம்’ என்ற பூரண நம்பிக்கை ஏற்பட்டுவிடவில்லை. அதனால்தான், சிறைக்குப் போவதற்காக ‘பேக்’ ஒன்றையும் நான் தயார் செய்திருந்தேன். கடந்த 7  வருடங்கள் அப்படிப்பட்ட  ஒரு  பக்குவத்தையும், மனதிடத்தையும் என்னிடம் உருவாக்கியிருந்தது.’’

``ஆனால், நீதிபதி குற்றமே நடக்கவில்லை என்று சொல்லவில்லையே. குற்றத்தை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று சொல்லித்தானே விடுதலை செய்திருக்கிறார்?’’

`` `ஆதாரங்கள் இல்லை; அதனால் விடுதலை செய்கிறேன்’ என நீதிபதி சைனி தீர்ப்பளிக்கவில்லை. மாறாக, ‘2ஜி  வழக்கின் குற்றச்சாட்டே சித்திரிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டு வழக்கிலிருந்து விடுவித்துள்ளார். அரசியல் மற்றும் கருத்தியல் தளங்களில் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட  சில அமைப்புகள், சில இயக்கங்கள், சில தனி நபர்கள் என நிறைய பேர் சேர்ந்து சித்திரித்ததுதான் 2ஜி வழக்கு. அவர்களின் மிகமுக்கிய நோக்கம், “இனி எப்போதும் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது; தி.மு.க-வை இதோடு அழித்துவிட வேண்டும்” என்பதாக மட்டுமே இருந்தது. அதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தலைவர் கலைஞர் அவர்களையும் இரக்கமில்லாமல் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்தது. அதனால்தான், எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவு அருகில் வர முடியுமோ... அவ்வளவு அருகில் வந்து, என்னையும் இதனுள் சிக்கவைத்தனர்.’’

``கலைஞர் தொலைக்காட்சிக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லை என்று இப்போதும் சொல்கிறீர்களா?’’ 

``கலைஞர் தொலைக்காட்சியில் நான் இரண்டு வாரங்கள் மட்டுமே இயக்குநராக இருந்தேன். ‘கமர்ஷியல் டெலிவிஷன் சேனல்’ ஒன்றில், எனக்கு எந்தவிதமான ஆர்வமும் இருந்ததில்லை. அதனால்தான், கலைஞர் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பைத் தொடங்குவதற்கு முன்பே நான் எனது பொறுப்பை ராஜினாமா செய்து, ஆர்.ஓ.சி-யில் கடிதம் கொடுத்தேன். இத்தனைக்கும், சி.பி.ஐ எல்லா ஆவணங்களையும் பார்த்தது; பார்த்துவிட்டுத்தான் வழக்குப்பதிவு செய்தது; பார்த்த பிறகும், என்னை வழக்கில் சேர்த்தார்கள் என்றால், அதற்கு என்ன நோக்கம் இருந்துவிட முடியும்? இத்தனைக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்தபட்ச பங்குகளை வைத்திருந்தது நான்தான்! இதையெல்லாம் திட்டமிட்டு மறைத்து, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஆசிர்வாதம் ஆச்சாரி, ‘கலைஞர் தொலைக்காட்சி எங்கு இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டு, ‘கனிமொழிதான் கலைஞர் தொலைக்காட்சியின் ஆக்டிவ் பிரெய்ன்’ என்று சொல்லவும் செய்தார். இதிலிருந்தே, இந்த வழக்குக்குப் பின்னால் உள்ள சதித்திட்டத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.’’

``தி.மு.க-பி.ஜே.பி கூட்டணி அமையப்போகிறது. அதற்கான உடன்பாடுகளில் ஒன்றுதான் இந்த விடுதலை என்றும் சிலர் சொல்கிறார்களே?’’ 

``நிச்சயமாக இல்லவே இல்லை! கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், பி.ஜே.பி முன்னெடுத்த மிக முக்கியமான வழக்கு இது. அதோடு, இந்த வழக்கின் விடுதலைக்கு முன்பும் சரி... பின்பும் சரி... தி.மு.க-வும், தளபதியும் பி.ஜே.பி-யை எல்லா விஷயத்திலும் எதிர்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். குஜராத் தேர்தலுக்கு வாழ்த்து சொன்ன தளபதி, ‘தமிழகத்தில் மதவாத சக்திகளை எதிர்க்க, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றுதானே குறிப்பிட்டார். பிரதமர் வந்து தலைவரைப் பார்த்துவிட்டுப் போன பிறகு, தி.மு.க-வின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். அப்படி ஒன்றும் இல்லையே. இந்த வழக்கில் பி.ஜே.பி எந்தவித உதவியும் செய்யவில்லை; அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை; அதைப் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கும் இல்லை.’’
``கனிமொழியின் 8 மாத திஹார் சிறை வாழ்க்கை அனுபவம் எப்படியிருந்தது?’’

``வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதலையும், மிகப்பெரிய அளவில் மன உறுதியையும் எனக்கு உருவாக்கிக் கொடுத்ததில், அந்தச் சிறை நாள்கள் மிக முக்கியமானவை.  தனிப்பட்ட முறையில், என் உண்மையான நண்பர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சிறைவாசம் பெரிதும் பயன்பட்டது. உண்மையான நண்பர்கள் கிடைப்பது பெரிய பொக்கிஷம்; அதை நான் பெற்றிருக்கிறேன் என்பது அப்போது புரிந்தது. அதுபோல, நண்பர்கள் என்ற அடையாளத்துடன் நம்முடன் இருந்தவர்கள், நமக்கு ஒரு கஷ்டம் என்று வரும்போது... சிறுகச் சிறுக எப்படி விலகிப்போவார்கள் என்பதையும் அப்போது அறிந்துகொண்டேன்.

நான் தலைவரின் மகளாகப் பிறந்ததால், பிறந்ததிலிருந்தே அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால்கூட, அரசியல்-அதிகாரப் போட்டிகளின் முழுமையான சுயரூபத்தை நான் எனது சிறைநாள்களில் தான் கண்டுகொண்டேன்.  ‘அரசியல் அதிகாரப் போராட்டம் எதையெல்லாம் செய்யும்... எந்த எல்லை வரை போகும்’ என்பதை நானே என் சொந்த வாழ்க்கையின் மூலம் உணர்ந்தது அந்தச் சிறை நாள்களில்தான்.’’

``2ஜி வழக்கைக் காரணம்காட்டி, கட்சியில் உங்களுக்குரிய இடம் மறுக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா?”

“ `40, 50 ஆண்டுகள் நான் அரசியலில் இருக்கிறேன்; எனக்கு இன்னும் போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை’ என்று நான் கேட்டால், அதில் நியாயமிருக்கிறது. அப்படி ஒன்றும் இல்லையே. கட்சியில் எனக்கு  இப்போது கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரமே போதுமானது என்றே நினைக்கிறேன்.’’

``உங்கள் விடுதலையை அடுத்து வெளியான வாழ்த்துகளில், எதிர் முகாமிலிருந்து வந்த டி.டி.வி.தினகரனின் வாழ்த்து மிகுந்த கவனம் பெற்றது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’  

``தி.மு.க-வுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கக்கூடிய ஒரு தலைவர், கட்சி-அரசியல் மாச்சரியங்களைத்தாண்டி, எனக்கு வாழ்த்து தெரிவித்ததை,  ஒரு ஆரோக்கியமான அரசியலாகத்தான் பார்க்கிறேன். இன்றைய சூழலில், அவர்களுடைய குடும்பமும் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளது; இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில், மற்றவர்களின் வலியையும் உணர்ந்து, தினகரன் வாழ்த்து தெரிவித்தது, உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான்.’’

``2ஜி வழக்கில் வெற்றி கிடைத்துள்ள சூழலில், ஆர்.கே.நகர்த் தேர்தலில் தி.மு.க-வுக்குப் படுதோல்வி கிடைத்துள்ளதே?’’

``ஜனநாயகத்தைவிடப் பணநாயகத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்ட தேர்தலாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். தேர்தல் ஆணையத்துக்குத் தொடர்ந்து புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இப்படிப்பட்ட முடிவுதான் ஆர்.கே.நகரில் வரும் என்று எதிர்பார்த்தோம். அது நிதர்சனமாகிவிட்டது.’’

``கவிஞர் கனிமொழி எப்படி இருக்கிறார்?’’ 

``இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், கனிமொழியின் கவிதைகள், தனிப்பட்ட முறையில் அவருடைய போராட்டங்கள் பற்றியதாக மட்டும் இருப்பதால், அவற்றைப் பதிப்பிக்க விரும்பவில்லை. இன்னும் சில கவிதைகள், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதியவை. அதனால், அவற்றை வெளியிட விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தலைவர் அரசியலுக்கு வந்தபிறகுதானே, லட்சக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்தார். அதனால், எழுத நேரம் இல்லை; சூழல் இல்லை என்பன போன்ற தடைகள் எல்லாம் கவிஞர் கனிமொழிக்குக் கிடையாது.’’ விகடன்

கருத்துகள் இல்லை: