வெள்ளி, 12 ஜனவரி, 2018

700 கோடி வரி ஏய்ப்பு..ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி ஜூவல்லர்ஸ் வருமான வரி அதிகாரிகள் கண்டு பிடிப்பு

வருமான வரிச் சோதனையில் ஜோயாலுக்காஸ்!
மின்னம்பலம் :ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 130 கடைகளில் வருமான வரித் துறையினர் நேற்று (ஜனவரி 10) சோதனை மேற்கொண்டனர்.
கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி நகை விற்பனை நிறுவனங்களுக்குச் சொந்தமாக இந்தியா முழுவதும் உள்ள 130 நகைக் கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வை வருமான வரித் துறையினர் மேற்கொண்டுள்ளதாக பிடிஐ நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

ஜோயாலுக்காஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், திரிச்சூர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தியாகராய நகர், குரோம்பேட்டை, திருச்சி, கோவை, கும்பகோணம், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையின் ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 8 அதிகாரிகள் வரை சோதனையில் ஈடுபட்டனர்.
ஜோயாலுக்காஸ் நிறுவனத்துக்கு இந்தியாவைத் தாண்டி துபாய், சிங்கப்பூர், குவைத், பஹ்ரைன், ஓமன், சவூதி, மலேசியா மற்றும் அமெரிக்காவிலும் விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் 1.7 பில்லியனாக உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நகைக் கடையாகத் திகழும் ஜோயாலுக்காஸில் நடைபெறும் வருமான வரிச் சோதனையின் முடிவுகள் பற்றி பின்னர் அறிவிப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (ஜனவரி 11) ஜோயாலுக்காஸ் கடைகளில் சோதனை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: