திங்கள், 18 டிசம்பர், 2017

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 4

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 4கேபிள் சங்கர்- மின்னம்பலம  : சென்ற கட்டுரையில் ஒரு தயாரிப்பாளரைக் கடனிலிருந்து காப்பாற்றியதைப் பற்றி எழுதியிருந்தேன். “ஹை... நல்லா கதை வுடுறே” என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார் “நீ தெய்வ லெவல்” என்று பாராட்டியும் இருந்தார்கள். பாராட்டு எனக்குத் தகுதியில்லாத ஒன்றுதான். ஏனென்றால், அந்த தயாரிப்பாளரை நான் வேண்டாம் என்று சொன்னது, அவரைக் காப்பாற்ற மட்டுமல்ல; என்னைக் காப்பாற்றிக்கொள்ளவும்கூட. தவறான புராஜெக்டில் மாட்டிக்கொண்டு வெளியே வரவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் போராடுவதற்குப் பதில் எனக்குத் தேவையான பட்ஜெட்டில் படமெடுக்க ஆள் தேடுவதுதான் புத்திசாலித்தனம்; சுயநலமும்கூட. வட்டியிலிருந்து காப்பாற்றியது எல்லாம் சுயநலத்தில் பொதுநலம்தான்.
வாய்ப்புக் கிடைத்தால் போதுமா?
ஆனால், பெரும்பாலான புதிய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் படம் கிடைத்தால் போதுமென்ற எண்ணத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுப் பின்பு அவஸ்தைப்படுவது மிகச் சாதாரணமாக நடக்கும் விஷயம். சமீபத்தில் ஒரு பட விழாவுக்குச் சென்றிருந்தேன். தயாரிப்பாளர் சுயதொழில் செய்பவர். அவரது நண்பர் பல வருடங்களாகப் பட வாய்ப்புக்காகப் போராடிக்கொண்டிருப்பவர். நண்பனின் போராட்டத்தைப் பார்த்து சரி நான் உனக்காகப் படம் தயாரிக்கிறேன் என்று களமிறங்கியிருக்கிறார். நண்பன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி, “மச்சான் நாம சேர்ந்து கலக்குறோம்” என்று கட்டியணைத்துக் கொண்டாட்டமாக பூஜை போட்டார்கள். தயாரிப்பு நண்பர் பெரும் பணக்காரர் எல்லாம் கிடையாது. நல்ல வியாபாரம். ஓரளவுக்குச் சொத்து உண்டு. கையில் காசாய் பெரிய தொகையெல்லாம் கிடையாது. ஆனால், குறைந்தது இரண்டு கோடி புரட்டக்கூடியவர்தான்.

படம் ஆரம்பித்தாகிவிட்டது. இயக்குநரான நண்பருக்கு அடிப்படை வேலைகளில் ஏகப்பட்ட குழப்பம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏகப்பட்ட தடாலடி குழப்பங்கள். ஒளிப்பதிவாளரை வைத்துக்கொண்டு ஏதோ சமாளித்துக்கொண்டிருக்க, அதை உணர்ந்த ஒளிப்பதிவாளர், மெல்ல டாமினேட் செய்ய ஆரம்பித்து, கடைசியில் ஒளிப்பதிவாளர் இயக்கும் படமாக அது மாறியது. இதற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தம் என பல பிரச்னைகள் வந்து, பட்ஜெட் எகிறிக்கொண்டே இருந்தது.
ஏன் பட்ஜெட் ஏகிறியது என்று கேட்டதால் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மன வருத்தம். பணம் இருக்கு என்பதற்காகக் கலையைப் பற்றி ஒன்றும் தெரியாத நீ எப்படி என்னைக் கேள்வி கேட்கலாமெனச் சண்டை. நான் பணம் போடலைன்னா நீ எப்படி உன் கலையைக் காண்பிக்க முடியுமென்று நியாயமான கேள்வியை அவர் முன்வைக்க, சண்டை தீர்ந்தபாடில்லை.

பொறியில் சிக்கிய தயாரிப்பாளர்
பணத்தைப் போட்டாச்சு; தயாரிப்பாளரால் இனி பாதில விட்டுட்டுப் போக முடியாது என்பதை நன்கு தெரிந்தவர் இயக்குநர். நாள்கள் கடந்தன. தயாரிப்பாளருக்கு வேறு வழியில்லை. கொஞ்சம் இறங்கி வந்தார். கடன் வாங்கினார். இருக்கும் வீட்டை அடகு வைத்தார். இரண்டு கோடிக்கு முடித்துக் கொடுப்பதாகச் சொன்ன படத்தில், படம் முழுவதும் காப்பி எடுப்பதற்கு முன்பே சுமார் மூணே முக்கால் கோடிக்கு ஆகியிருக்கிறது. கையில் இருந்த இரண்டு கோடியைத் தவிர மீதியெல்லாம் தயாரிப்பாளரின் கடன்.
அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டில்தான் அந்தத் தயாரிப்பாளரை சந்தித்தேன். இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆளுக்கொரு திசையில் பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு, தனித்தனியே போனார்கள். ஆடியோ விழாவுக்கு மட்டுமே சுமார் மூன்று லட்சம் செலவு. இன்னமும் டி.ஐ. மற்றும் இன்ன பிறவற்றுக்கு செட்டில் செய்ய வேண்டியிருக்கிற நிலையில், எனக்கு மட்டுமே பிரத்யேகமாய் படத்தை யாருக்கும் தெரியாமல் எடிட் சூட்டில் காட்டினார். வியாபார சாத்தியங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்த்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.
மீள முடியுமா?
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள். டெக்னீஷியன்கள் புதியவர்கள். படத்துக்குச் செலவு செய்த தொகைக்கும் படத்தில் தெரியும் வறுமையான விஷுவல்களுக்கும் சம்பந்தமேயில்லை. அவ்வளவு வீண் செலவு. படம் நெடுக, ஒன்றுக்கொன்று தொடர்பான காட்சிகள் இல்லை. ஒளிப்பதிவு மட்டுமே ஓரளவுக்கு சுமார். பாடல்கள் எல்லாம் திராபை. படம் முடிந்து வெளியே வந்தவுடன் என்ன சொல்லப் போகிறேன் என்று தயாரிப்பாளர் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தேன்.
“சாட்டிலைட், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஏதாச்சும் வித்து அட்வான்ஸ் வாங்க முடியுமா?”
“சான்ஸே இல்லைங்க. இன்னிக்கு எல்லாமே படம் வெளியான பின் மட்டுமே இந்த வியாபாரம் எல்லாம் நடக்குது. ஆடியோ தவிர. ஆடியோவுக்கு வியாபாரமெல்லாம் இல்லை. சும்மா கண்டெண்டை அவங்ககிட்ட கொடுத்துட்டு, ரெவின்யூ ஷேர்தான்” என்றேன்.
“அய்யோ.. ஆடியோ ரைட்ஸ் மட்டுமே குறைஞ்சபட்சம் 30 லட்சத்துக்கு போகும்னு சொன்னாங்களே... மியூசிக் மட்டுமே இதுவரைக்கும் 40 லட்சம் செலவு செய்திருக்கிறேன்” என்றார் அப்பாவியாய்.

“சார் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்தப் படத்தை பொறுத்தவரை உங்களை நல்லா ஏமாத்தியிருக்காங்க. இதுலேர்ந்து தப்பிக்கணும்னா... ஒண்ணு நீங்க எடுத்த வரைக்கும் போதும்னு ஏதோ ஒரு விளம்பரம் பண்ணி, கொஞ்சமா செலவு செய்து ஒரு நாளு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டு, ஹிந்தி, டப்பிங், ஆடியோ ஷேர்லனு வித்துட்டு கடனை அடைக்கிற வழியப் பார்த்துட்டு போகணும். அதுக்கே இன்னமும் 50 லட்சம் வேணும். இல்லை. போனது எல்லாம் போகட்டும்னு அப்படியே ட்ராப் பண்ணிட்டு, பட்ட கடனை அடைக்க ஊருக்கு போயிருங்க. வியாபாரத்துல கவனம் செலுத்துங்க. இதையெல்லாம் மீறி படம் காவியம், தமிழ் சினிமாவையே புரட்டி போட்டிரும்னு எல்லாம் சொன்னாங்கன்னா உங்க இஷ்டம்” என்றேன்.
அவர் முகம் முழுவதும் யோசனையாக இருந்தது.
(அடுத்த கட்டம்? அடுத்த வாரம்...)
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com)
கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 1
கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 2
கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 3

கருத்துகள் இல்லை: