செவ்வாய், 19 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் க்ளைமேக்ஸ்: 10 ஆயிரம் ரூபாய் டோக்கன்!

மின்னம்பலம்  :ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஐந்து மணியோடு ஓய்ந்துவிட்டது. ஆனாலும் தொகுதிக்குள் எதிர்பார்ப்புகளும், பல வகையான பண அலைகளும் ஓயவில்லை.
ஆர்.கே.நகர் க்ளைமேக்ஸ்: 10 ஆயிரம் ரூபாய்  டோக்கன்!கடந்த முறை வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறி வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரு வாரம் முன்னதாகவே தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக பாஜக தலைவர் தமிழிசை சாலை மறியலில் அமந்தார். ஆனால் தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் பகிரங்க பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக புகார்கள் கிளம்பின.
இதுபற்றி முக்கிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தாலும் பிரசாரம் ஓய்வதற்கு முந்தைய இரண்டு நாட்களில் அதிமுகவினர் முழு வீச்சில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, கடந்த சனிக் கிழமையன்றே தொகுதியில் இருந்து பெரும்பாலும் புறப்பட்டு விட்டனர்.

எடப்பாடி அணியினர் பணம் கொடுத்தது பெரிய அளவில் எக்ஸ்போஸ் ஆகிவிட்டதால் டிடிவி தினகரன் சட்டென தனது அணியினரை அழைத்தார். நாம் இப்போது யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார். ஆனால் அதற்குப்பிறகு க்ளைமேக்ஸில் தினகரன் எடுத்த முடிவுதான் அதிரடி.
தினகரன் பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களில் எல்லாம் அதிக வரவேற்பு கிடைத்ததால் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். அதனால் இந்த முறை ஓட்டுக்கு பணத்தையும் யாரும் கொடுக்க முடியாத அளவுக்கு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. சிறையில் இருக்கும் சசிகலா ஓட்டுக்கு இருபதாயிரம் வரை வேண்டுமானாலும் கொடுக்கச் சொல் என்று தகவல் அனுப்பினாராம்.
இதனால் மேலும் உற்சாகமான தினகரன் அணியினர் அந்த அளவுக்குப் போகாமல் ஓட்டுக்கு பத்தாயிரம் என்று சீலிங் வைத்தனர். தினகரன் சுயேச்சையாக போட்டியிட்ட போதும் தொகுதியின் பல பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் தினகரன் அணியில்தான் இருக்கின்றனர். எனவே ஒரு பக்கம் ஒரு குழுவினர் பிரசாரம் சென்றுவிட, இன்னொரு டீம் அந்தந்த லோக்கல் நிர்வாகிகளோடு வீடு வீடாக களமிறங்கியது. அவர்களின் பாக்கெட்டில் கூட சுத்தமாக ஒரு ரூபாய் நோட்டுகூட எடுத்துச் செல்லக் கூடாது என்று உத்தரவு. ஏனெனில் யார் வந்து சோதனையிட்டாலும் பணம் இருந்தால்தான் பிரச்னை என்பதால் இந்த முன்னேற்பாடு.
“வீடுவீடாகப் போய் அந்தந்த வட்ட நிர்வாகிகள் மூலம் சீரியல் நம்பர் எழுதப்பட்ட ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டது. பார்த்தால் டோக்கன் மாதிரி இருக்காது. சாதாரண பேப்பர் போலதான் இருக்கும். அந்த டோக்கனைக் கொடுத்து, ‘குக்கருக்கு ஓட்டு போட்டுருங்கம்மா... தேர்தல் முடிஞ்சதும் என்னை (வட்ட நிர்வாகி) வந்து பாருங்க. ஓட்டுக்கு பத்தாயிரம்னு எத்தனை ஓட்டோ, அந்த டோக்கனைக் கொடுத்துட்டு வாங்கிக்கலாம்’ என்று கூறி வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகித்து முடித்துவிட்டனர். விநியோகித்த டோக்கன்களுக்கு சரியான கணக்கையும் தங்கள் நோட்டில் எழுதிக்கொள்கின்றனர்.
’ஓட்டுப் போட்டப்புறம் எப்படி கொடுப்பீங்க?’ என்று சில வாக்காளர்கள் கேட்டதற்கு, ‘ போன வாட்டி நாலாயிரம் கொடுத்த என்னை உங்களுக்குத் தெரியாதா? உங்க ஏரியாவுலதான இருக்கேன். பணம் வரலேன்னா சட்டையப் புடிச்சி கேளுங்க’ என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள் குக்கர் நிர்வாகிகள்’’ என்று நேற்றும் இன்றும் நடந்த காட்சிகளை விவரித்தனர் டோக்கன் வாங்கியவர்கள்.
இந்த க்ளைமேக்ஸ் டோக்கன் விநியோகம், தொகுதியில் ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார்கள் தினகரன் அணியினர்

கருத்துகள் இல்லை: