வியாழன், 21 டிசம்பர், 2017

ஆர் கே நகர் ..75 வீதம் வாக்குகள் பதிவு .. யாருக்கு சாதகம்... சீமானுக்கா????? பஜகவுக்கா??????

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (டிசம்பர்21) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
75% வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காக 50 வாக்குப்பதிவு மையங்களில் 258 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3,300 போலீசாரும், 1,500 துணை ராணுவத்தினரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அடையாள அட்டைச் சரிபார்ப்புக்கு பின்னரே வாக்காளர்கள் சாவடிக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலாகவே, மக்கள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் குவியத்தொடங்கினர். வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 7.32 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டன. எனினும் உடனடியாக அவை சீர் செய்யப்பட்டன. இதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி நேதாஜி நகருக்குட்பட்ட 38வது வார்டு வாக்குச்சாவடி பகுதியில் வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வரதப்பா நாயுடு காப்பக சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இதேபோல், அதிமுக வேட்பாளர் மதுசூதனனும் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார். முன்னதாக, மதுசூதனன் வாக்களித்த சாவடியில் செய்தியாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாலை 5 மணியளவில் தேர்தல் நிறைவு பெற்றது. எனினும் வாக்களிக்க மக்கள் நீண்ட வரிசையில் இருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 60 வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களே அதிகளவு வரிசையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை ஜெயலலிதா போட்டியிட்டபோது 67.91 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கன் வழங்கப்பட்ட சாவடிகளில் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். மதியத்திற்கு மேல் வாக்காளர்கள் அதிகளவு திரண்டு வந்து வாக்களித்தனர். எனவே இந்த அதிக வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
வருகிற 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை: