வியாழன், 21 டிசம்பர், 2017

அமைச்சர் சரோஜா 30 லட்சம் லஞ்ச வழக்கு .... பணி நிரந்தரம் செய்ய அதிகாரி ராஜமீனாட்சியிடம்

tamilthehindu :பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் வழக்கு ஜனவரி 4-ம் தேதி விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ராஜமீனாட்சி. இவரின் பணியை நிரந்தரம் செய்வதற்கும், பணிமாற்றம் செய்வதற்கும் 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அமைச்சர் சரோஜா மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ராஜமீனாட்சி புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாமல் செப்டம்பர். 21-ம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை இயக்குநரிடம் ராஜமீனாட்சி புகார் அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், தன்னை பணியிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பணி நீட்டிப்பு வழங்க லஞ்சம் கேட்டும், வீட்டிற்கு அழைத்தும் துன்புறுத்தியதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு நல திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிபிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் நிலுவையில் உள்ள நிலையில், உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது. இதனையேற்ற நீதிபதி ஜனவரி 4-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு ஜனவரி 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: