வியாழன், 21 டிசம்பர், 2017

2 ஜி வழக்கில் இன்று தீர்ப்பு... இன்னும் சில மணி நேரங்களில் ..


தினமணி மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் தீர்ப்பு வியாக்கிழமை ( டிசம்பர் 21) அறிவிக்கப்படவுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது.


இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் (ஏடிஏஜி) தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தொடுத்துள்ள மற்றொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி. கேதான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அமலாக்கத் துறை வழக்கு: மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டோரின்அனைத்துத் தரப்பு வாதங்களும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு டிசம்பர் 21-ஆம் தேதி அளிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதன்படி 2ஜி வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: