புதன், 20 டிசம்பர், 2017

வெற்றிவேல் மீது தேர்தல் / பாஜக ஆணையம் நடவடிக்கை! .. ஜெயலலிதா விடியோவால் பாஜக அதிர்ச்சி ...

வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!மின்னம்பலம் :ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்குப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உலாவரும் நிலையில், மரணம் குறித்த உண்மை நிலையைக் கண்டறிய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது ’126 பி’ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்” எனத் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வெற்றிவேல் மீது ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் புதுவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சட்டப்பிரிவு 126 மற்றும் 188ன் கீழ் வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு பிரவீன் நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது தேர்தல் விதிமீறல் என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்துக்குத் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“தேர்தல் நேரத்தில் இந்த வீடியோவை வெளியிட்டது தவறு என வழக்குப் பதிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், ஏன் பிரதாப் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை? ஒரு வருடமாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து வாய் திறக்காத பிரதாப் ரெட்டி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், சுயநினைவற்ற நிலையிலே ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். அரசின் மிரட்டல் காரணமாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தொடர்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தினகரனுக்குத் தெரியாமல் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், வீடியோவைக் கண்டு பயப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை: