சனி, 5 நவம்பர், 2016

50 நாட்கள் நெருங்குகிறது! இதுவரை எந்த அமைச்சரும் ஜெயலதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை! இன்னுமா புரியல்ல?

அலுவலகத்தில் இருந்தோம். வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில்
ஏதோ மெசேஜ் டைப்பிங் ஆனபடி இருந்தது. சற்று நேரத்துக்குப்பிறகு வந்து விழுந்தது இந்த மெசேஜ்.
‘‘முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி அப்பல்லோவில் இருந்து அடிக்கடி செய்திக்குறிப்பு வரும். நேற்றுதான் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி முதல்வர் உடல்நிலை பற்றி ஒரு விழாவுக்கு வந்தபோது வாய் திறந்து பேசினார். ‘முதல்வர் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர ஆரம்பித்துள்ளார். எப்போது டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்று பேசினார். முதல்வரின் உடல்நிலையைப் பற்றி பல வதந்திகள் வந்து போனாலும், இப்போதுதான் முதல்முறையாக முதல்வர் உடல்நிலை பற்றிய உண்மை வெளிவந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘முதல்ல அம்மா நல்லா இருக்காங்க... அவங்க வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அலுவலகப் பணிகளை ஆஸ்பத்திரியில இருந்தே செய்யுறாங்க...
என்றெல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. அப்புறம் ஒரு கட்டத்துலதான் அம்மாவுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதே சொன்னாங்க. ஆனாலும், குணமடஞ்சுட்டாங்க என்று சொல்லித்தான் ஏமாற்றி வந்தாங்க. இப்போ அப்பல்லோ ரெட்டி என்ன பேசியிருக்காரு பாருங்க. ‘தன்னைச் சுற்றி நடப்பதை அம்மா உணர ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொல்றாரு. அப்படின்னா இவ்வளவு நாள் அவங்களுக்கு எதுவுமே தெரியாமல் சுயநினைவு இல்லாமல்தான் இருந்தாங்களா? அம்மாவிடம் கேட்டுத்தான் உள்ளாட்சிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டோம்னு சொன்னாங்க. இப்போ, அம்மாவோட கைரேகை வெச்சு வேட்புமனு தாக்கல் செய்யக் கொடுத்தாங்க. இதெல்லாம் எப்படி நடந்துச்சு? அம்மாவுக்குத் தெரியாமலேயே இதெல்லாம் நடந்திருக்கா? இப்போதான் தன்னைச் சுற்றி நடப்பது அம்மாவுக்குத் தெரியுதுன்னா, இவ்வளவு நாளா நடந்தது எல்லாம் தெரியாதுன்னுதானே அர்த்தம். அம்மாவுக்குத் தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்கோ தெரியலை.டெல்லியில சசிகலா புஷ்பா மீடியாவுக்கு பேட்டி கொடுத்தாங்க. அதுல சின்னம்மா பற்றி தப்பாச் சொன்னாங்க. அதைப்பார்த்து, எங்களுக்கு பயங்கர கோபம்தான் வந்துச்சு. ஏதோ காழ்ப்புணர்ச்சியில சின்னம்மா மேல அபாண்டமாக பொய் சொல்றாங்கன்னு நினைச்சோம். ஆனா, இப்போ அவங்க சொன்னதெல்லாம் உண்மையோன்னு யோசிக்கிற மாதிரி இருக்கு. என்ன காரணமா வேணும்னாலும் இருக்கட்டும். யாராவது ஒரு மூத்த அமைச்சரைப் பார்க்க அனுமதிக்கலாம் இல்லை. 50 நாட்களை நெருங்கிடுச்சு. சின்னம்மாவைத் தவிர யாரும் இன்னும் அம்மாவை பார்க்கல. பார்க்கவும் விடவேயில்ல. அம்மா சீக்கிரம் வரணும். அப்போதான் இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்’ என்று, என்னிடம் புலம்பித் தீர்த்துவிட்டார் தென்மாவட்ட அமைச்சர் ஒருவர்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

பேஸ்ஃபுக்கும் ஸ்டேட்டஸ் ஒன்றை டைப் செய்ய ஆரம்பித்தது. ‘’அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று காலையில் வழக்கம்போல வந்தார் ஓ.பன்னீர்செல்வம் அவர் வந்த சற்றுநேரத்தில் தம்பிதுரையும் அங்கே ஆஜரானார். இருவரும் முதல்தளத்தில் உள்ள ரிஷப்ஸனில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கே வந்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரும் அவர்களோடு உட்கார்ந்துவிட்டாராம். ‘டிஸ்சார்ஜ் பற்றி சின்னம்மா எதுவும் சொன்னாங்களா’ என்று பன்னீரிடம் கேட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். அதற்கு பன்னீரோ, ‘இதுவரைக்கும் எந்தத் தகவலும் சொல்லலை. எப்படியும் இன்னும் பத்து நாளாவது ஆகுமில்ல’ என்று பன்னீர் சொல்ல, அதற்கு விஜயபாஸ்கர் ‘நேற்று டாக்டர் ரெட்டி சார் கொடுத்த பேட்டியில, எப்போ வீட்டுக்குப் போகணும்னு அம்மாதான் முடிவு பண்ணனும்னு சொல்லியிருக்கிறார். அப்படீன்னா எப்போ வேணும்னாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம்னுதானே அர்த்தம். நானும், டாக்டர் சிவகுமார்கிட்ட பேசினேன். அம்மா நல்லாயிருக்காங்கன்னுதான் அவர் சொல்றார். வீட்டுக்குப் போகுறதப்பத்தி எதுவும் பேசமாட்டேங்கிறார். அதனாலதான் கேட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். இப்படியாக, ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் பற்றிய எந்த விவரமும் அமைச்சர்களுக்குக்கூட தெரியவில்லை. ஏற்கனவே, தீபாவளிக்கு முன்னதாக வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பதில் சசிகலா ரொம்பவே ஆர்வம் காட்டினார். ஜோதிடர்களைப் பார்த்து நாளும் குறித்தார். ஆனால், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் நோ சொன்னதால் அது தள்ளிப்போனது. இப்போது, டாக்டர் ஓ.கே. சொன்னாலும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.” என்று முடிந்த அந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: