ஞாயிறு, 30 அக்டோபர், 2016

கேரளாவில் 6 மாதத்தில் 910 கற்பழிப்பு வழக்குகள்: மாநில போலீஸ் தகவல்


திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஜூன் மாதம் வரை 6 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 7909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் க்ரைம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதில் 2332 வழக்குகள் பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும், 190 வழக்குகள் ஈவ்டீசிங் பிரிவிலும், 78 வழக்குகள் கடத்தல் பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 910 வழக்குகள் கற்பழிப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1263 கற்பழிப்பு வழக்குகள்தான் பதிவாகியிருந்தன. தற்போது 6 மாதத்தில் மட்டும் 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள மாநில பெண்கள் கமிஷன் தலைவர் கே. சி. ரோசாக்குட்டி கூறுகையில் ‘‘ விழிப்புணர்வு செமினார் மற்றும் வகுப்புகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அத்துடன் விரைவு கோர்ட் மற்றும் அதிவேக விசாரணை போன்றவைகளும் இல்லாத காரணத்தினால் கற்பழிப்பு வழக்குகளை சந்திப்பதில் பெரும் சவால் ஏற்படுகிறது. பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் கொடூர குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு சரியான நேரத்தில் தக்க தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாமல் நாம் தோற்றுப்போகும் நிலை உள்ளது’’ என்றார்.

கருத்துகள் இல்லை: