வெள்ளி, 4 நவம்பர், 2016

அழகிரி கோபாலபுரம் வருகை ..... ஸ்டாலினுக்கு பிடிக்காதவர்கள் எல்லாம் வெளியே போனால்? திமுக இன்னொரு அதிமுக?

கோபாலபுரம் கருணாநிதியின் வீடு வழக்கத்தைவிட இன்று பரபரப்புடன் காணப்பட்டது. ஒட்டுமொத்த குடும்பமும், கோபாலபுரத்தில் குவிந்ததுதான் காரணம். காலையிலேயே கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, தனது மனைவியுடன் கருணாநிதி வீட்டுக்கு வந்தார். அவர் வரும் தகவல் தெரிந்தவுடனேயே, கருணாநிதி வீட்டுக்கு அருகில் வசித்துவந்த செல்வியும் அங்கு வந்துவிட்டார். அழகிரியின் திடீர் வருகை கருணாநிதி வீட்டில் இருந்த பாதுகாவலர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் தந்தது. மனைவி சகிதமாக உள்ளே நுழைந்த அழகிரி, நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்குச் சென்றார். அங்கு கட்டிலில் படுத்திருந்த கருணாநிதியைச் சந்தித்துள்ளார். அழகிரி கருணாநிதி அறைக்குச் சென்றபோது, செல்வியும் அங்கு இருந்துள்ளார். அழகிரி மனைவி காந்தி, கருணாநிதியிடம் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ‘‘முன்பைவிட இப்போது பரவாயில்லை” என்று சொல்லியுள்ளார். அழகிரி, சிறிது நேரம் வரை ஏதும் பேசாமல் கருணாநிதியைப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். செல்வியும், காந்தியும்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

‘‘உங்களை நம்பித்தான் இருக்கேன்!”அழகிரி எதிர்காலம் குறித்து செல்வி தன் தந்தையிடம் கொஞ்சம் உருக்கமாகப் பேசினார். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டே இருந்தார் கருணாநிதி. ‘‘எனக்குத் தெரியாத மூன்று தொகுதிகளின் தேர்தல் முடியட்டும். அதற்குப் பிறகு பார்க்கலாம். அதுவரை பொறுமையாக இருக்கட்டும்” என்று சொல்லியுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதில் சொல்லாமல் அழகிரி அமைதியாக இருந்துள்ளார். காந்தியும், தனது கணவருக்காகப் பரிந்து பேசியுள்ளார். மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கனிவோடு விசாரித்துள்ளார். செல்வி எப்படியும் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டுவந்து விடவேண்டும் என்று தொடர்ந்து கருணாநிதியிடம் பேசிவருகிறார். கருணாநிதியைப் பார்த்துவிட்டுக் கிளம்பியபோது... அழகிரி, ‘‘உங்களுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டதும், பதற்றத்துலதான் அன்னைக்கு வந்து பார்த்தேன். நான் வெளியூர் போறதால என் மனைவியோடு வந்து உங்களைப் பார்த்துட்டுப் போறேன். உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து நான் அமைதியாக இருக்கேன் அப்பா. நீங்க உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பித்தான் இருக்கேன்” என்று உருக்கமாகப் பேசிவிட்டு வந்தார்.

‘ஸ்டாலின்தான் என் அரசியல் வாரிசு!’
அழகிரி, இப்படிப் பேசியதும் கொஞ்சம் கலங்கியுள்ளார் கருணாநிதி. அவரிடம், கையை மட்டும் அசைத்து... ‘‘சென்று வா’’ என்று சொல்லியுள்ளார். அழகிரி, அறையில் இருந்து வெளியே வந்தபின் காந்தியும், செல்வியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் தயாளு அம்மாவையும் அழகிரி சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். இவர்கள், கருணாநிதியின் அறையில் பேசிக்கொண்டிருந்தபோதே மு.க.தமிழரசும் உள்ளே வந்துவிட்டார். அழகிரி, மாடியில் இருந்து கீழே இறங்கியபோது... கனிமொழியும் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்.
‘ஸ்டாலின்தான் என் அரசியல் வாரிசு’ என்று கருணாநிதி சொன்னதை... அவரது குடும்பத்தில் இருந்த பலரும் ரசிக்கவில்லையாம். அழகிரி மீது கருணாநிதி தனி பிரியம் வைத்திருந்தார் என்பது அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும்.

செல்விக்கும் ஸ்டாலின் மீது வருத்தம்!
இளைமைக் காலத்தில் இருந்தே எதையும் தடாலடியாகச் செய்யும் அழகிரியின் சுபாவம் கருணாநிதிக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதுவே கட்சிக்குள் பிரச்னையாக வந்ததுதான் அப்பாவுக்கும், மகனுக்கும் மனஸ்தாபத்துக்குக் காரணமாகிவிட்டது. அழகிரிக்காக ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையிடம் பேசி வருகிறார் செல்வி. ஆனால், அழகிரி உள்ளே வருவதற்கு ஸ்டாலின் தரப்பு ஆரம்பத்திலிருந்தே முட்டுக்கட்டை போட்டுவருகிறது. ஸ்டாலின் மீது அந்த வருத்தம் செல்விக்கும் உண்டாம். அப்பா மகனிடையே இந்த உருக்கமான சந்திப்பின் பலன் அழகிரிக்கு கிட்டுமா என்பது கருணாநிதி கெடுவிதித்த தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரிந்துவிடும்.

- அ.சையது அபுதாஹிர் | படம்- குமரேசன்  விகடன்.காம்

கருத்துகள் இல்லை: