திங்கள், 31 அக்டோபர், 2016

குஷ்பு அதிரடி : பொது சிவில் சட்டத்தை ஆதரிகிறேன் .. பாஜக கொண்டுவர முயற்சிக்கும் பொது...


மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை. இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தற்போதைய மத்திய பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதையும் அக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, பொதுசிவில் சட்டம் அவசியம்தான்.. பெண்களுக்கு சுதந்திரம் அவசியம். ஆனால் தேர்தல் அரசியலுக்காக இதை பாஜக கையிலெடுக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் முத்தலாக் முறை உள்ளிட்டவைகள் குரானில் இல்லை; மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆகையால் அதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறாரே என்ற கேள்விக்கு, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அவசியம்... இந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்... ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலை வைத்து இதை பாஜக கையிலெடுக்கிறது எனக் கூறினார். பொதுசிவில் சட்டத்தை உறுதியாக ஆதரிப்பேன் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருக்கும் இக்கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: