வியாழன், 3 நவம்பர், 2016

ட்ராபிக் ராமசாமி வழக்கு :ஜெ’ சுயநினைவு கையெழுத்து எங்கே?

அதிமுக-வினரின் வேட்புமனுக்களில் ஜெயலலிதாவின் கைரேகை
பதியப்பட்டுள்ளநிலையில், அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் டிராஃபிக் ராமசாமி.
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 42 நாட்களைக் கடந்து சிகிச்சை பெற்றுவரும்நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களோடு தாக்கல்செய்யும் பார்ம் ஏ, மற்றும் பி-இல் ஜெயலலிதாவின் இடதுகை பெருவிரல் ரேகை உள்ளது. இது, பல்வேறு கேள்விகளையும் சட்ட விவாதங்களையும் உருவாக்கியநிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிந்த வேட்புமனுக்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கைரேகை என்பது அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்கள் செய்கிற ஒன்று. இப்போது வேட்புமனு படிவங்களில் ரேகை பதிந்துள்ள ஜெயலலிதா நன்கு படித்தவர். இதுவரை கையெழுத்து மட்டுமே போட்டு வந்தவருடைய கைரேகை திடீரென பதியப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த கைரேகை அவரது சுய நினைவுடன்தான் பதியப்பட்டுள்ளது என்பதை அதில் அத்தாட்சி வாக்குமூலமும், கையெழுத்தும் இட்ட மருத்துவர்கள் கூறவில்லை. தவிரவும் இதுவரை கையொப்பமிட்டவர் திடீரென கையெழுத்துப் போடுகிறார் என்றால் அதை வீடியோவாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது தேர்தல் அதிகாரியின் முன்னிலையிலாவது அந்த ரேகைகள் பதியப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, இது எதுவும் நம்பும்படியாக இல்லை. எனவே, இதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: