செவ்வாய், 1 நவம்பர், 2016

நடிகை கௌதமியும் கமலஹாசனும் பிரிந்து விட்டனர் !

நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று நடிகை கவுதமி அறிவித்து
உள்ளார். 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் 'தசாவதாரம்', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறிஉள்ளார்.அண்மையில் பிரதமர் மோடியை கௌதமி சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பல முக்கிய பிரச்சனைகள் பற்றி கருத்து பரிமாற்றம் செய்தது இருந்தமை யாவரும் அறிந்ததே ..


தனது மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார். 

இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், "நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. 

இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.

என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அதுவாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவாகும். ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. 

என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாவேன். இப்போதும்கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் சவால்களை எதிர்கொண்டபோது எல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன்.

இந்த வேளையில் என்னுடைய அதிமுக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கிறது,” என்று கூறிஉள்ளார். 

இதுதொடர்பாக செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து பேசிய கவுதமி, கமல்ஹாசனுடன் பிரிவது என்பது உடனடியாக எடுக்கப்பட்டது கிடையாது,  தீவிரமாக யோசித்த பின்னரே இம்முடிவை எடுத்து உள்ளேன், என்றார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் திரைப்படங்களில் பணியாற்றுவேன்  தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை: